அல் பலாஹ் மருத்துவமனைக்கு நிதி: அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவு
அல் பலாஹ் மருத்துவமனைக்கு நிதி: அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவு
UPDATED : நவ 13, 2025 10:59 PM
ADDED : நவ 13, 2025 10:56 PM

புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட 4 டாக்டர்கள் பணியாற்றிய அல் பலாஹ் மருத்துவமனைக்கு வரும் நிதி குறித்து விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லி செங்கோட்டை பகுதியில் சிக்னலில் நின்றிருந்த கார் கடந்த 10ம் தேதி வெடித்து சிதறியது. இதில் 13 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக அறியப்பட்ட இந்த சம்பவத்தில் காரை இயக்கி வெடிக்கச்செய்தது உமர் நபி என தெரியவந்தது. அதேபோல், இந்த குண்டுவெடிப்பில் பெண் டாக்டரான ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் நான்கு பேரும், டில்லி அருகே பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது தெரியவந்ததை அடுத்து அந்த பல்கலை புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி குண்டுவெடிப்புசம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை விசாரணை
இந்நிலையில், அல் பலாஹ் மருத்துவமனைக்கு கிடைக்கும் நிதி குறித்து விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இப்பல்கலையின் வரவு செலவு கணக்குகளை கேட்டுள்ள மத்திய அரசு, டில்லி போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளையும் பல்கலை குறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது.
நோட்டீஸ்
இந்நிலையில் அல் பலாஹ் பல்கலையின் சமூக வலைதள பக்கத்தில், அந்நிறுவனம் என்ஏஏசி எனப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கல்லூரிகள், பல்கலைகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து சான்று வழங்கும் தன்னாட்சி அமைப்பான என்ஏஏசி எனப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க அந்த பல்கலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

