ஒரு நொடி! 3 அடி இடைவெளி! பாதுகாவலர்களால் எஸ்கேப்பான சந்திரபாபு நாயுடு
ஒரு நொடி! 3 அடி இடைவெளி! பாதுகாவலர்களால் எஸ்கேப்பான சந்திரபாபு நாயுடு
ADDED : செப் 07, 2024 12:16 PM

விஜயவாடா: பாலத்தில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது ரயில் வர, பாதுகாவலர்களால் நூலிழையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் மழை, வெள்ள பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு நேரில் சென்று கள நிலவரத்தை பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு முடுக்கிவிட்டு வருகிறார்.
விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளை அவர் பார்வையிட்டார். மதுரா நகர் ரயில் பாலம் மீதேறி அதிகாரிகளுடன் கீழே ஓடிக் கொண்டு இருக்கும் வெள்ளத்தை சந்திரபாயு நாயுடு பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அதே தண்டவாளத்தில் ரயில் ஒன்று அதி வேகமாக வந்தது.
இதைக்கண்டு பதறிய பாதுகாவலர்கள் ஓடிச் சென்று சந்திரபாபு நாயுடுவை பாலத்தின் ஓரத்தில் மெதுவாக இழுத்து நிறுத்தி பாதுகாத்தனர். ரயிலுக்கும், அவர் நின்ற இடத்துக்கும் 3 அடி மட்டுமே இடைவெளி இருந்தது. மிக குறுகிய இடைவெளியில் ரயில் அதி வேகத்தில் அவர்கள் அனைவரையும் கடந்து சென்றது.
அனைத்தையும் வெகு இயல்பாக எதிர்கொண்ட சந்திரபாபு நாயுடு சிரித்தபடியே அங்கிருந்து நடந்து சென்று மற்ற பகுதிகளை பார்வையிட்டார். இதைக்கண்ட அங்குள்ள மக்கள் அவரை நோக்கி கை அசைத்து உற்சாக குரல் எழுப்பினர்.