ADDED : டிச 29, 2024 06:46 AM

கிராமங்களில் காணாமல் போன, 'அரட்டை கச்சேரி திண்ணை'கள் மீண்டும் புத்துயிர் பெறுகின்றன.
ஒரு காலத்தில் கிராமங்களில், வெளிப்புறம் திண்ணைகள் இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. மாலை நேரத்தில் பெரியவர்கள், திண்ணையில் கூடி அரட்டை அடிப்பர்; ஊர்க்கதை பேசுவர்.
அவரவர் குடும்பங்களை பற்றி தகவல் பகிர்ந்து கொள்வர். அரசியல், சினிமா, நாட்டு நடப்பு என, இவர்கள் பேசாத விஷயங்களே இல்லை. அனைத்து வயதினருக்கும், திண்ணை பிடித்தமான இடமாக இருந்தது.
ஊருக்கு நடுவில் ஆலமர திண்ணையிலும், மக்களின் அரட்டை கச்சேரிகள் நடக்கும். பணி முடிந்து வந்த களைப்பும் மறந்து போகும். சிரித்து பேசி மகிழ்வர். இது அவர்களின் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளித்தது.
ஒவ்வொரு வீடுகளின் திண்ணைகளிலும், இத்தகைய காட்சிகளை காணலாம். நாளடைவில் அனைவரின் வாழ்க்கையும் அதிநவீனமாக மாறியது.
பலரும் பணத்தை துரத்தி செல்லும் அவசரத்தில், மகிழ்ச்சியை தொலைத்து விட்டனர். சக மனிதர்களுடன் பேச்சை குறைத்து கொண்டனர்.
சிரிப்பை மறந்து விட்டனர். கிராமங்களிலும் அரட்டை கச்சேரிகளை காண்பதே அபூர்வமாகி விட்டது.
அலுவலக பணி நெருக்கடி, தனிப்பட்ட பிரச்னைகள், குடும்ப பிரச்னைகள் குறித்து மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல், உள்ளுக்குள் பூட்டி வைத்து, மன அழுத்தத்தால் அவதிப்படுவோரே அதிகம்.
சிலர் வார இறுதியில் பிக்னிக், சினிமா, பூங்கா, பார்ட்டி என, பொழுதை கழிக்கின்றனர்.
ஆனால் இது தற்காலிக தீர்வாகத்தான் இருக்கும்; நிரந்தர தீர்வு அல்ல. நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் தற்போது அதே சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு அரட்டை திண்ணைகள் இருந்தன; இப்போது திண்ணைகள் இல்லை, அரட்டையும் இல்லை.
அனைவரும் மொபைல் போன், கம்ப்யூட்டர், 'டிவி'க்களில் மூழ்கியுள்ளனர். இவைகள் மக்களை திண்ணைக்கு வர விடாமல் தடுக்கின்றன.
திண்ணைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.என்.டி.ஏ.சி.எச்., எனும் இந்தியன் நேஷனல் டிரஸ்ட் பார் ஆர்ட் அண்ட் கல்ச்சுரல் ஹெரிடேஜ் அமைப்பு, 'மங்களூரு சாப்டர்' என்ற திட்டத்தை துவங்கி, ஆலமர திண்ணைகளுக்கு புத்துயிர் அளிக்கிறது. கடலோர மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட திண்ணைகளை சீரமைத்துள்ளது.
ஐ.என்.டி.ஏ.சி.எச்., ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பசு கூறியதாவது:
சமூகம் மற்றும் சுற்றுச்சூழலின் அவசியத்தை பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பழைய மரத்தடி திண்ணைகளை சீரமைக்கிறோம்.
திண்ணைகள் இல்லாத இடங்களில், புதிதாக கட்டுகிறோம். பொது மக்கள், மாணவர்களும் எங்கள் பணிகளில் கை கோர்க்கலாம்.
திண்ணைகள் என்பது நபரின் உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு அளிக்கும் இடமாகும். மரத்தடிகள் நிழல் கொடுக்கும். மரத்தின் நிழலில் ஆரோக்கியம் கிடைக்கும்.
இவைகள் குடும்பத்தை ஒன்று சேர்க்கின்றன. மூத்தவர்களை ஒன்று சேர்க்கின்றன.
இன்று திண்ணை பகுதிகளை, வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. பார்க்கிங் இடமாக மாறியுள்ளது. திண்ணை பகுதிகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.

