ADDED : நவ 05, 2024 09:22 PM
புதுடில்லி:வேலை செய்த வீட்டில் தங்கவளையலை திருடிய சமையல்காரர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் சிவம் ரத்தோர்,30. தெற்கு டில்லி டிபென்ஸ் காலனியில் ஒரு தொழிலதிபர் வீட்டில் 10 நாட்களுக்கு முன் சமையல் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் அந்த வீட்டில் 47 கிராம் தங்க வளையல் மாயமானது.
இதுகுறித்து, போலீசில் தொழிலதிபர் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் அந்த வீட்டுக்குள் யாரும் நுழையவில்லை என்பது தெரிந்தது.
சிவம் ரத்தோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பின் ரத்தோரையும் காணவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பரிதாபாத்தில் இருந்து உன்னாவ் நகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த சிவம் ரத்தோரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தொழிலதிபர் வீட்டில் திருடப்பட்ட 47 கிராம் தங்க வளையலை பறிமுதல் செய்தனர்.
ரத்தோர் மீதுய் ஹரியானா மாநிலம் குருகிராம் 53வது செக்டார் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

