பன்னீரை மிருதுவாக்க ரசாயனம்; புற்றுநோய் ஏற்படும் அபாயம்
பன்னீரை மிருதுவாக்க ரசாயனம்; புற்றுநோய் ஏற்படும் அபாயம்
ADDED : மார் 27, 2025 02:01 AM

பெங்களூரு : பன்னீரை மிருதுவாக்க கலக்கப்படும் ரசாயனத்தால், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என, கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில், பல்வேறு உணவுப் பொருட்களின் தரம் குறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் பெங்களூரு உட்பட மாநிலத்தில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து, 231 பன்னீர் மாதிரிகள் ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட 17 பன்னீர்களின் முடிவில், இரண்டு மாதிரிகளில், 'பாக்டீரியாக்கள்' இருப்பதும், பன்னீரை மிருதுவாக்க ரசாயனங்கள் கலக்கப்படுவதும் கண்டறியப்பட்டது.
ரசாயனம் கலப்பதால், பன்னீரில் இயல்பாக இருக்கும், 'கால்சியம், புரதம்' குறைகிறது. மேலும், சிறுநீரக பிரச்னைகள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரியவந்தது.
பாக்டீரியா இருந்த பன்னீர் தயாரித்த நிறுவனங்கள் மற்றும் ரசாயனம் கலந்த பன்னீரை தயாரித்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ''பன்னீரில் ரசாயனம் கலந்திருப்பது குறித்த ஆய்வு அறிக்கை இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. அறிக்கை கிடைத்தபின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்,'' என்றார்.