வேலை வாங்கி தருவதாக சென்னை பெண்ணிடம் ரூ.46.30 லட்சம் மோசடி; மூணாறு போலீசில் சரணடைந்தவர் கைது
வேலை வாங்கி தருவதாக சென்னை பெண்ணிடம் ரூ.46.30 லட்சம் மோசடி; மூணாறு போலீசில் சரணடைந்தவர் கைது
ADDED : ஏப் 14, 2025 03:42 AM

மூணாறு; மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.46.30 லட்சம் மோசடி செய்து, கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மூணாறு போலீசில் சரணடைந்த பன்னீரை 60, போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி பாரதி நகர் தனிஷ்கா. இவருக்கும், உறவினர்கள் நான்கு பேருக்கும் வேலை தேடிக் கொண்டிருந்தனர். 'ஆன்லைன்' வாயிலாக கோவையில் தனியார் நிறுவனம் நடத்திய மூணாறு லட்சம் காலனியைச் சேர்ந்த அருண்தினகரன், மனைவி ஜென்சிஜெனடின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் டில்லியில் வருமானவரித்துறை, இந்திய துாதரகம் உட்பட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 2019ல் நேரடியாகவும், வங்கி கணக்கு வழியாகவும் பல தவணையாக ரூ.45.20 லட்சம் பெற்றனர்.
அதன் பிறகு வருமானவரித்துறை, இந்திய துாதரகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய பணி நியமன கடிதம் அனுப்பினர். அந்த கடிதம் போலி என தெரிய வந்ததால் பணத்தை திருப்பி கேட்டபோது அவர்களின் உறவினர் மூணாறு லட்சம் காலனியைச் சேர்ந்த பன்னீரின் இடத்தை விற்று பணம் தருவதாக கூறினர். மேலும் ரூ.1.10 லட்சம் வரை பெற்று ஏமாற்றினர்.
மூணாறு போலீசில் அருண்தினகரன், ஜென்சி ஜெனட், அருண் தினகரன் பெற்றோர் அம்பா, விஜயா, பன்னீர் மீது தனிஷ்கா புகார் அளித்தார்.
இந்த வழக்கில் மூன்றாம் குற்றவாளியான பன்னீர், முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மூணாறு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

