ADDED : அக் 17, 2024 01:51 AM
மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நான்கு விமானங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக, சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கவுன் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அவரது தந்தை ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து மும்பை போலீசார் கூறியதாவது:
தன் நண்பனுடன் ஏற்பட்ட பண தகராறு காரணமாக, அவனை பழிவாங்குவதற்காக இந்த, 17 வயது சிறுவன், விபரீத திட்டம் போட்டது தெரியவந்தது. தன் நண்பன் பெயரில் சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தில் கணக்கு ஒன்றை அந்த சிறுவன் துவக்கினான். இந்த கணக்கு வாயிலாக, நான்கு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தான். இதில் இரண்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்ற நிலையில், மற்றொரு விமானம் ரத்து செய்யப்பட்டது.
இவ்வாறு மிரட்டல் விடுத்தால், தன் நண்பனை வழக்கில் சிக்க வைக்கலாம் என எண்ணி, இந்தச் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

