
*ரொமான்டிக் ஹீரோ
நடிகர் அனிஷ் தேஜஸ்வர், ஆக்ஷன் படங்களில் அதிகம் நடித்தவர். முதன் முறையாக ரொமான்டிக் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். ஆறாம் அரவிந்த்சாமி என்ற படத்தில் நடிக்கிறார். இவருக்கு மிலனா நாகராஜ், ஹ்ருதிகா சீனிவாஸ் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழுவினர். திரைக்கு கொண்டு வர தயாராகின்றனர். சமீபத்தில் படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டனர். பிரமோத் எழுதிய பாடலுக்கு, அர்ஜுன் ஜன்யா இசை அமைத்துள்ளார். பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நவம்பர் 22ம் தேதி, படம் திரைக்கு வருகிறதாம். தன்னை ரொமான்டிக் ஹீரோவாக திரையில் பார்க்க அனிஷ் ஆவலுடன் காத்திருக்கிறார்.
* நவராத்திரி விரதம்
தருண் சந்திரா நடித்த சீனா என்ற படம் மூலமாக திரையுலக பயணத்தை துவக்கியவர் காருண்யா ராம். சிறிது இடைவெளிக்கு பின், வஜ்யகாயா, கிரகூரின கய்யாலிகளு உட்பட, அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தவர். தொழிலில் பிசியாக இருந்த இவர், கொரோனா பரவியதால், இரண்டு ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் நடிப்புக்கு வந்து உள்ளார். இவரது வீட்டில் நவராத்திரியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். பத்து நாட்களும் காருண்யா விரதம் இருப்பாராம். தேவி பூஜை செய்த பின், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வார். இம்முறை மைசூருக்கு சென்று, தசரா நிகழ்ச்சிகளை பார்த்து, சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
* ஊதியம் பிரச்னை
துருவா சர்ஜா நாயகனாக நடித்துள்ள, மார்ட்டின் திரைப்படத்துக்கு சென்சார் முடிந்துள்ளது. யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படம், இம்மாதம் 11ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி என, ஆறு மொழிகளில் திரைக்கு வருகிறது. சைனிஸ், ஜப்பானிஸ், ஆங்கிலம் உட்பட, 13 மொழிகளில் உலகம் முழுதும் திரையிடப்படுகிறது. ஏற்கனவே டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதற்கிடையே ஊதியம் விஷயமாக, இயக்குனர் அர்ஜுன், தயாரிப்பாளர் உதய் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திரைப்பட வர்த்தக சபை தலையிட்டும் பிரச்னை சரியாகவில்லை. இதனால் படப்பிரசாரத்துக்கு இயக்குனரை அழைக்கவில்லை. எரிச்சலடைந்த அவர், தன்னை பிரசாரத்துக்கு அழைக்காமல், படத்தை திரையிட கூடாது என, உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
* ஊட்டி டாக்டர் முதலீடு
தமிழகம் ஊட்டியை சேர்ந்த டாக்டர் மகேஷ்பாபு, கன்னடத்தில் பிராப்தி என்ற படத்தை தயாரிக்கிறார். இயக்குனரும் அவரே. தமிழர் என்றாலும் கன்னட மொழி மீதுள்ள பற்றால், இந்த திரைப்படத்துக்கு முதலீடு செய்துள்ளார். நடிகரும், இயக்குனருமான சாயி பிரகாஷ், டிரெய்லர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். பல படங்களில் வில்லனாக மிரட்டிய ஜெயசூர்யா, பிராப்தி யில் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகி மஞ்சுளா குருராஜின் மருமகள் கவுரி சாகர், நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் நடக்கும் மூன்று அம்சங்களை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.
* லட்சுமி வந்தாச்சு
நடிகை ஹர்ஷிகா பூனச்சா, புவன் பொன்னண்ணா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. திரையுலகை சேர்ந்த இவர்கள் பல ஆண்டுகள் காதலித்து, கடந்தாண்டு இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கர்ப்பிணியாக இருந்த ஹர்ஷகாவுக்கு, நேற்று முன் தினம் அதிகாலை, பெண் குழந்தை பிறந்தது. வெள்ளிக்கிழமை லட்சுமி வந்துள்ளதாக, குடும்பத்தினர் குஷி அடைந்துள்ளனர். தான் தந்தையான விஷயத்தை சோஷியல் மீடியாவில், புவன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். தாய், சேய் ஆரோக்கியமாக உள்ளனராம்.
* சைக்கலாஜிகல் திரில்லர்
நடிகர் பூர்ணசந்திரா நாயகனாக நடிக்கும், நிமித்த மாத்ரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 15 ஆண்டுகளுக்கு முன், தட்சிண கன்னடா மங்களூரில் நடந்த, பயங்கரமான உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. பாரா சைக்கலாஜிகல் திரில்லர் கதையாகும். ரோஷன் டிசோசா, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். தன் தந்தையிடம் இருந்து விலகிய பத்திரிகையாளரான நாயகன், குற்ற வழக்கை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இவர் உண்மையை கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதே, படத்தின் கதையாகும்.