மாணவர்கள் அரசியலுக்கு வரணும் முதல்வர் ஆதிஷி சிங் அழைப்பு
மாணவர்கள் அரசியலுக்கு வரணும் முதல்வர் ஆதிஷி சிங் அழைப்பு
ADDED : டிச 07, 2024 09:36 PM
புதுடில்லி:“சமூக மாற்றத்தை ஏற்படுத்த படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மோசமான நபர்களிடம் நாட்டை ஒப்படைத்து விடக்கூடாது,”என, டில்லி முதல்வர் ஆதிஷி சிங் பேசினார்.
செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி நிறுவன தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஆதிஷி சிங் பேசியதாவது:
பத்து ஆண்டுகளுக்கு முன் இதே கல்லூரியில்தான் நானும் படித்தேன். கல்லூரி மாணவியாக இருந்த காலத்தில், அரசியல் அணுக முடியாததாக தோன்றியது. ஆனால், இன்று நிலை அப்படி இல்லை. படித்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை மோசமான நபர்களின் கையில் சிக்கி விடக்கூடாது.
படித்த, நல்ல எண்ணம் கொண்ட இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கும் போது, நம் வாழ்வின் மிக முக்கியமான முடிவுகளை தவறான நபர்களால் எடுக்க அனுமதிக்கிறோம்.
டில்லியில் ஆம் ஆத்மி அரசு அமைந்த பிறகுதான், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்பட்டது. சர்வதேச தரத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையிலும் ஆம் ஆத்மி அரசு சாதனையை நிகழ்த்தியுளது. மொஹல்லா கிளினிக்குகள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் ஆகியவை ஆம் ஆத்மியின் மிக முக்கிய சாதனைகள்.
நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கைகயில்தான் உள்ளது. நேர்மையான அரசியலுக்கு மாணவர்கள் வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.