திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
ADDED : செப் 20, 2024 12:22 AM

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் ஏழுமலையான் கோவிலில், முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியின்போது பல முறைகேடுகள் நடந்தன. பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில், தரம் குறைந்த பொருட்களையும், நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பையும் பயன்படுத்தினர்.
சீரமைப்பு
தற்போது துாய்மையான நெய் பயன்படுத்தப்படுகிறது. கோவிலின் புனிதம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் இருந்த குறைபாடுகள், சீர்கேடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அமைச்சரும், சந்திரபாபுவின் மகனுமான நார லோகேஷ், சமூக வலைதளத்தில் இது தொடர்பாக முந்தைய அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு களுக்கு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த, தேவஸ்தான முன்னாள் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளதாவது:
திருப்பதி கோவிலின் புனிதத்தையும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி கோவிலில் தயாரிக்கப்படும் லட்டிற்கு கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில், நந்தினி நெய் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ல் இருந்த போது, நெய்க்கான டெண்டரை புதுப்பிக்க அதிக விலை கேட்டதால், கர்நாடகாவிலிருந்து நெய் வாங்குவதை ஆந்திரா நிறுத்தியது.
நிறுத்தம்
சந்திரபாபு நாயுடு முதல்வரான பின், கர்நாடகாவிடம் இருந்து ஆந்திரா மீண்டும் நெய் வாங்கத் துவங்கி உள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு குறித்து கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக் நேற்று கூறியதாவது:
திருப்பதி லட்டு தயாரிக்க கர்நாடகாவிலிருந்து, கடந்த 50 ஆண்டுகளாக நெய் வழங்கப்பட்டது. ஆனால், 2019க்கு பின் நெய் வழங்குவது நிறுத்தப்பட்டது. வேறு எங்கோ நெய் வாங்கி லட்டு தயாரித்தனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது குறித்து அவரே விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் அனம் வெங்கடராம ரெட்டி கூறுகையில், “லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யின் மாதிரி, குஜராத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
“அதில், நெய்யில் மாட்டின் கொழுப்பு மற்றும் சில விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டு அறிக்கை வந்துள்ளது,” என்றார்.
ஆனால் இந்த தகவலை ஆந்திர அரசோ, திருமலை திருப்பதி தேவஸ்தானமோ உறுதி செய்யவில்லை.
இழிவான குற்றச்சாட்டு!
அரசியலுக்காக பல விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை முன்வைப்பர். ஆனால், தன் அரசியல் லாபத்துக்காக ஏழுமலையானுக்கு எதிராக மிகவும் இழிவான, பொய் குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ளார். சட்டப்படி இதை எதிர்கொள்வோம்.
-------கருணாகர் ரெட்டி
மூத்த தலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்.,