அகதிகளால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி முதல்வர் கெஜ்ரிவால் அச்சம்
அகதிகளால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி முதல்வர் கெஜ்ரிவால் அச்சம்
ADDED : மார் 14, 2024 11:30 PM
புதுடில்லி:“குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அகதிகளால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்,” என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
என்னுடைய கேள்விகளுக்கு அமித் ஷா பதில் அளிக்கவில்லை. என்னை ஊழல்வாதி என்று கூறியுள்ளார். நான் முக்கியமில்லை. நாடு முக்கியம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கையிலான மக்களுக்கு கதவுகள் திறந்துவிடப்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் நம் நாட்டுக்குள் குடியேறுவார்கள்.
எங்கள் சொந்த மக்களுக்கு வேலை கொடுக்க முடியாதபோது, வெளிநாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு வேலை, வீடு, தேவையான அடிப்படை வசதிகளை கொடுப்பது எப்படி?
முதலில் நம் நாட்டில் வசிக்கும் சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்.
கடந்த 1947ம் ஆண்டை விட பெரிய குடியேற்றம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் நடக்கும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் 2.5 கோடி முதல் 3 கோடி வரை சிறுபான்மையினர் உள்ளனர்.
பிற நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு, நம் நாட்டின் வரி செலுத்துவோரின் பணத்தை செலவிடுவதை ஏற்க முடியாது. சி.ஏ.ஏ.,வை அமல்படுத்துவது, நாட்டை பாதுகாப்பற்றதாக மாற்றும். சட்டம் - ஒழுங்கு கெடும்.
அகதிகளை தங்கள் வீடுகளுக்கு அருகில் குடியமர்த்தினால், பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.

