இனி யாரும் ராவணனாக மாறக்கூடாது முதல்வர் ரேகா குப்தா பேச்சு
இனி யாரும் ராவணனாக மாறக்கூடாது முதல்வர் ரேகா குப்தா பேச்சு
ADDED : ஜூன் 28, 2025 08:29 PM

புதுடில்லி:''அவசரநிலை காலத்தில் நாடே சிறைச்சாலையாக மாறியது; அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
நாட்டின் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பா.ஜ., மகளிர் அணி, டில்லியில் நேற்று நடத்திய மாதிரி பார்லிமென்ட் நிகழ்ச்சியை, முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைத்து பேசியதாவது:
கொலை
காங்கிரஸ் கட்சியினர் இன்று, அரசியல் சாசன சட்டத்தை தங்கள் பைகளில் வைத்துக் கொண்டு திரிகின்றனர். ஆனால், காங்கிரஸ் அரசில்தான் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்திரா தன் பதவியை பாதுகாத்துக் கொள்ள, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அவசர நிலையை அறிவித்தார்.
மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் எந்தக் காரணமும் இன்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாடே சிறைச்சாலையாக மாறியது. எவரையும் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என போலீசுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.
அவசர நிலை காலத்தை ஏன் நினைவுகூர வேண்டும் என கேட்கின்றனர். இனி, யாரும் ராவணனாக மாறக்கூடாது என்பதை நினைவூட்டவே ஒவ்வொரு ஆண்டும் அவசர நிலை காலத்தை அனுஷ்டிக்கிறோம்.
கடந்த கால மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அரசியல்
நாட்டில் அரசியல் ரீதியாக என்ன நடக்கிறது, முன்பு என்ன நடந்தது என்பதன் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களின் பிரச்னைகளை உணர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா, அவசர நிலையை அறிவித்தார். இது, 1977ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரை நீடித்தது.
அவசர நிலை காலத்தில் நாளிதழ், வார இதழ், மாத இதழ்கள் மத்திய அரசால் தணிக்கை செய்து வெளிவந்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட நாடு முழுதும் லட்சக்கணக்கானோர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.