ஹிட்லர் போல செயல்படும் முதல்வர் மத்திய அமைச்சர் ஷோபா ஆவேசம்
ஹிட்லர் போல செயல்படும் முதல்வர் மத்திய அமைச்சர் ஷோபா ஆவேசம்
ADDED : செப் 20, 2024 05:51 AM

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா ஹிட்லர் போன்று செயல்படுவதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மாண்டியா, நாகமங்களாவில் நடந்த கலவரம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா, கர்நாடக சட்டசபை எதிர்க்க்கட்சி தலைவர் அசோக் மீது நேற்று முன்தினம் இரவு, நாகமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து பெங்களூரில் ஷோபா நேற்று அளித்த பேட்டி:
யார் காரணம்?
முதல்வர் சித்தராமையா, தற்போது ஹிட்லர் போன்று செயல்படுகிறார். பா.ஜ., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. மாநில வரலாற்றில் முதல்முறை எதிர்க்கட்சி தலைவர் மீதே வழக்கு பதிவாகி உள்ளது. பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் குரல்களை ஒடுக்கி, அவர்களை நசுக்கும் வேலை நடக்கிறது.
வங்கதேச பிரதமருக்கு ஏற்பட்ட நிலை, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கும் ஏற்படும் என்று கூறிய, காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவன் டிசோசா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடகாவை என்ன செய்ய நீங்கள் காத்து உள்ளீர்கள். நாட்டின் வரலாற்றில் முதல்முறை விநாயகர் சிலையை, போலீஸ் வேனில் கொண்டு சென்று கரைத்தது நமது மாநிலத்தில் நடந்து உள்ளது. நாகமங்களா கலவரத்திற்கு யார் காரணம்.
கேரளாவில் இருந்து வந்தவர்கள், கடைகளுக்கு தீ வைத்து உள்ளனர். இது சிறிய சம்பவம் என்கிறார் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர். பக்கத்து மாநிலத்தினர் வந்து கலவரம் செய்வது சிறிய சம்பவமா. யாத்கிரில் நேர்மையான போலீஸ் அதிகாரி பரசுராம் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு காரணமான எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துான்னுரை இன்னும் கைது செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அசோக் ஆவேசம்
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் 'எக்ஸ்' வலைதள பதிவு:
நாகமங்களா மக்கள், எனக்கு அளித்த தகவலின்படி, விநாயகர் சிலை கலவரம் தொடர்பாக, சில தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். என் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நுாறு வழக்கு போட்டாலும் என் குரலை ஒடுக்க முடியாது. அரசின் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டேன்.
பாலஸ்தீன கொடியை பிடித்து கொண்டு, சிலர் ஊர்வலம் நடத்திய புகைப்படத்தை பகிர்ந்தேன். பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், மாநிலத்தின் பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் சம்பவங்கள் பற்றி, அரசுக்கு எச்சரிக்கை விடுத்தேன்.
கலவரத்தை தடுக்க முடியாத, மதவெறியர்களை ஒடுக்க முடியாத மந்தமான அரசு, என் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது கோழைத்தனத்தின் அடையாளம். நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, சிறையில் இருந்தவன் நான்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.