ADDED : பிப் 22, 2024 11:06 PM

பெங்களூரு: ''முதல்வர் பதவி தொடர்பாக, இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. இது குறித்து, காங்., மேலிடம் முடிவு செய்யும்,'' என ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பெங்களூரு ரூரல் காங்., - எம்.பி., சுரேஷ், நேற்று முன் தினம் ஊடகத்தினர் சந்திப்பில், 'இரண்டரை ஆண்டுக்கு பின், துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் பதவியில் அமர்வார்' என கூறியிருந்தார்.
இது குறித்து, அமைச்சர் பிரியங்க் கார்கே, நேற்று கூறியதாவது:
பதவி காலம் பகிர்ந்தளிப்பு தொடர்பாக, நான்கு தலைவர்கள் இடையே, ஆலோசனை நடந்துள்ளது. எதுவாக இருந்தாலும், கட்சி மேலிடம் முடிவு செய்யும். என்னையும் சேர்த்து, யாருக்கும் இது பற்றி தகவல் தெரியாது. முதல்வர் பதவி குறித்து பேச, யாருக்கும் அதிகாரம் இல்லை.
தற்போதைக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், தேர்தலை எதிர்கொள்வோம். காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதில், சந்தேகம் இல்லை. தேவையின்றி எதையும் கற்பனை செய்யாதீர்கள்.
சிவகுமார் முதல்வராவார் என, எம்.பி., சுரேஷ் கூறியுள்ளார். கனவு காண்பது தவறல்ல. அவர் கூறியது பொய் என்றும் நான் கூறவில்லை. கனவுகள் நனவாக கால அவகாசம் வேண்டும். மாற்றங்கள் கட்டாயம். நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.