ADDED : மார் 27, 2025 12:58 AM

மும்பை : மும்பை சர்வதேச விமான நிலைய கழிப்பறை குப்பைத் தொட்டியில், பச்சிளம் குழந்தை சடலம் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிப்பறை குப்பைத் தொட்டியில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இது பற்றி உள்ளூர் போலீசுக்கு அவர்கள் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பச்சிளம் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை சடலத்தை வீசியது யார் என அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இந்த குழந்தை பற்றி தகவல் கிடைத்தால் பயணியரும், பொதுமக்களும் தகவல் அளிக்குமாறும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.