ADDED : பிப் 14, 2025 04:45 AM

புதுடில்லி: நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் கயிலாய மலையில் பிரம்மபுத்ரா நதி உற்பத்தியாகிறது. திபெத்தில் இந்த நதி யார்லங் சாங்போ என்று அழைக்கப்படுகிறது.
அங்கு உள்ள மேடாக் பகுதியில் பிரம்மபுத்திராவின் குறுக்கே 60,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் நீர்மின் திட்டத்துடன் கூடிய பிரமாண்ட அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த நதி பாயும் கீழ் பகுதிகளான நம் நாட்டின் அருணாச்சல், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு பிரச்னை ஏற்படும் என்ற கவலை நிலவுகிறது.
இதுகுறித்து, மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ராஜ்யசபாவில் கூறியதாவது: பிரம்மபுத்ரா நதியில், சீனாவின் நீர்மின் திட்டங்கள் உட்பட அனைத்து விஷயங்களையும் அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. நாட்டின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
பிரம்மபுத்ரா தொடர்பான பிரச்னைகளை சீனாவுடன் விவாதிக்க, 2006ல் ஏற்படுத்தப்பட்ட நிபுணர்- தலைமையிலான அமைப்பு மற்றும் நம் துாதரகம் ஆகியவை உதவி புரிகின்றன. எல்லைக்கு வெளியே உற்பத்தியாகும் நதியாக இருந்தாலும், அதன் கீழ் கரையோர மாநிலங்களுக்கு அந்த நதியின் நீரில் உரிமை உண்டு. இதுகுறித்து சீன அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.
கீழ் கரையோர பகுதிகளின் நலன்கள், நதியின் மேல் பகுதிகளில் உருவாக்கும் திட்டங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்படி வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.