ADDED : நவ 30, 2024 08:38 PM
புதுடில்லி:'மாநகராட்சிப் பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு உத்வேகம் ஏற்படுத்தும் வகையிலான சினிமா திரையிடப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநகராட்சி பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், எதிர்கால சவால்களை சமாளிக்கவும், நேர்மறையான இலக்கை முடிவு செய்யவும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
அவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, நிஜ ஹீரோக்களின் வாழ்க்கை பற்றிய சினிமாக்கள் மாணவர்களுக்கு திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்து சாம்பியன், ஸ்ரீகாந்த் பல்லாவின் 'இன்ஸ்பிரேஷன் ஜர்னி', 'குத்தாலி லட்டு', 'ஐ ஆம் கலாம்' மற்றும் '12வது பெயில்' போன்ற சினிமாக்களை திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர்களின் ஆர்வத்தை தூண்டுதல் மற்றும் புரிதல் நிலைக்கு ஏற்ப கார்ட்டூன் படங்கள் திரையிடப்படும்.
இந்த திட்டத்துக்காக பள்ளி வளாகத்தில் 'ஸ்மார்ட் டிவி' மற்றும் ஒளிபரப்பு சாதனங்களை பொருத்த கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சினிமா திரையிட்ட பின், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற திரைப்படங்கள், கடினமான சூழ்நிலையை சமாளிக்கும் திறனை மாணவர்கள் பெறுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.