பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் மோதல்: தண்ணீர் பாட்டிலை வீசிய திரிணமுல் எம்.பி.,
பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் மோதல்: தண்ணீர் பாட்டிலை வீசிய திரிணமுல் எம்.பி.,
UPDATED : அக் 22, 2024 07:50 PM
ADDED : அக் 22, 2024 05:42 PM

புதுடில்லி: வக்பு வாரிய மசோதா தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் எம்.பி.,க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், கண்ணாடி தண்ணீர் பாட்டிலை எடுத்து மேஜையில் அடித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கைவிரலில் காயம் ஏற்பட்டது. அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ., எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டுக்குழு
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அதன் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜ., எம்.பி., ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் அடங்கிய இந்த குழுவில் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்ப்பு
இந்நிலையில் இந்தக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் எம்.பி.,க்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: வக்பு வாரிய மசோதா தொடர்பாக நேற்று பார்லிமென்ட் வளாகத்தில் கூட்டுக்குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி 3 முறை பேசினார். மீண்டும் 4வது முறையாக பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார். அதற்கு எம்.பி., அபிஜித் கங்கோபாத்யாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கல்யாண் பானர்ஜி, அங்கிருந்த கண்ணாடி தண்ணீர் பாட்டிலை எடுத்து மேஜையில் ஓங்கி அடித்தார். பிறகு அதனை எடுத்து கூட்டுக்குழு தலைவரை நோக்கி வீசினார். இதில், கல்யாண் பானர்ஜிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து கல்யாண் பானர்ஜியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ., எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.