விநாயகர் ஊர்வலத்தில் மோதல் 3 பேருக்கு கத்தி குத்து; மூவர் கைது
விநாயகர் ஊர்வலத்தில் மோதல் 3 பேருக்கு கத்தி குத்து; மூவர் கைது
ADDED : செப் 19, 2024 05:46 AM
பெலகாவி: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சண்டையில், மறுநாள் மூவர் கத்தியால் குத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்; மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலகாவியின் சென்னம்மா சதுக்கம் முன் நேற்று முன்தினம் இரவு, தர்ஷன் பாட்டீல், சதீஷ் பூஜாரி, பிரவீன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர், மூவரையும் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர். இதை பார்த்த அப்பகுதியினர், மூவரையும் மீட்டு, மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக, ஏ.பி.எம்.சி., போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களிடம் விசாரித்தனர்.
நகர போலீஸ் கமிஷனர் யடா மார்ட்டின் மார்பன்யாங் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடனமாடியபடி சென்றுள்ளனர். அப்போது, தாக்குதலுக்கு உள்ளான மூவருக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இவ்விஷயமாக அவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இவர்களை தாக்கியதாக குரி, மகேஷ், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர். போதையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது, விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.
இவ்வாறு அவர்கூறினார்.

