ஹேமமாலினியை துாதராக்குங்கள் ம.பி., - பா.ஜ., அமைச்சர் ஆசை
ஹேமமாலினியை துாதராக்குங்கள் ம.பி., - பா.ஜ., அமைச்சர் ஆசை
ADDED : மார் 14, 2024 02:29 AM

போபால், மத்திய பிரதேசத்தின், கந்தவா பகுதி அஞ்சலகத்தில், புதிதாக பாஸ்போர்ட் சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநில பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் விஜய் ஷா நேற்று முன் தினம் துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் வங்கியை விட அதிக வட்டி தருகின்றன. ஆனால் விளம்பரம் இல்லாத காரணத்தால், வங்கியை விட பின் தங்கியுள்ளன. அஞ்சல் துறைக்கு என விளம்பர துாதர்கள் யாரும் இல்லை.
பாலிவுட் நடிகையும், மதுரா லோக்சபா தொகுதியின் பா.ஜ., - எம்.பி.,யுமான ஹேமமாலினியை நான் அதற்காக பரிந்துரைக்கிறேன்.
ஹேமமாலினியை இந்திய கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் உதாரணம் எனலாம். பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் படியான எந்தப் படத்திலும் அவர் நடித்ததில்லை.
நான் ஹேமமாலினியின் ரசிகன். அவர் சொன்னால், மக்கள் வங்கியில் போட்டுள்ள பணத்தை எடுத்து அஞ்சலகத்தில் டெபாசிட் செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

