துாய்மை 5.0: அரசு அலுவலகங்களில் கழிவுகளை அகற்றும் பிரசாரம்: நாடு முழுதும் 7 லட்சம் இடங்களில் நடத்த ஏற்பாடு
துாய்மை 5.0: அரசு அலுவலகங்களில் கழிவுகளை அகற்றும் பிரசாரம்: நாடு முழுதும் 7 லட்சம் இடங்களில் நடத்த ஏற்பாடு
ADDED : அக் 05, 2025 12:37 AM

புதுடில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் இருந்த பழைய பொருட்களை சேகரித்து விற்றதன் வாயிலாக, 3,296 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, 'துாய்மை 5.0' என்ற பெயரில் துாய்மை பணிகளை மிகப்பெரிய அளவில் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மஹாத்மா காந்தியின் 145வது பிறந்த தினத்தையொட்டி, 'ஸ்வச் பாரத்' எனப்படும் துாய்மை இந்தியா திட்டத்தை, கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார்.
திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பது, வீதிகளில் குப்பை கொட்டுவது உள்ளிட்ட அசுத்தமான பழக்கங்களில் இருந்து மக்கள் விடுபட்டு, தேசத்தை துாய்மையாக வைத்திருக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
பிரசாரம் இதைத் தொடர்ந்து பொதுவெளிகளில் மட்டுமின்றி, மத்திய அரசு அலுவலகங்களிலும் துாய்மை இந்தியா பரப்புரை தீவிரமடைந்தது. குறிப்பாக, 2021 முதல் மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து, காலாவதியான ஒட்டை உடைசல் கொண்ட பழைய பொருட்கள், நீண்ட ஆண்டுகளாக குப்பை போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
அதன்படி, காலாவதியான பழைய பொருட்களை சேகரித்து விற்றதன் வாயிலாக மத்திய அரசுக்கு இதுவரை, 3,296 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துஉள்ளது.
இதையடுத்து, இதன் ஐந்தாம் கட்ட பிரசாரமாக இந்த ஆண்டு நாடு முழுதும், 7.22 லட்சம் அரசு அலுவலகங்களில் துாய்மை பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, மன்சுக் மாண்டவியா, ராம் மோகன் நாயுடு மற்றும் ஜிதேந்திரா சிங் என, மூன்று மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய் இவர்கள், துாய்மை பிரசாரத்தை அவ்வப்போது ஆய்வு செய்வதுடன், தொய்வு ஏற்பட்டால், அதை சரிசெய்வதற்கான வழிகளையும் கூறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய அரசில் உள்ள 84 அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 800 மூத்த அலுவலர்களும் இந்த பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பழைய பொருட்களை சேகரித்து விற்றதன் மூலம் வருவாய் கிடைத்தது மட்டுமின்றி, 696 லட்சம் சதுர அளவுக்கு அரசு அலுவலகங்களில் இடங்கள் காலியாகி, அலுவலக பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.