விண்வெளியிலும் சுத்தம்: வெற்றிகரமாக சாதித்தது இந்தியா
விண்வெளியிலும் சுத்தம்: வெற்றிகரமாக சாதித்தது இந்தியா
ADDED : ஆக 14, 2026 04:53 AM

- நமது நிருபர் -
சர்வதேச விண்வெளி கொள்கையை பின்பற்றி, விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட்டின் மேல்பாகத்தை, ஒன்பது மாதங்களில் பூமிக்கு திருப்பி விண்வெளியை சுத்தமாக பராமரித்து, இந்தியா சாதனை படைத்துள்ளது.
கடந்தாண்டு நவ., 2ல், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 'எல்.வி.எம்., 3 -- எம்5' ராக்கெட்டின் வாயிலாக, 'சி.எம்.எஸ் - 3' தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட பின், விபத்து ஏற்படாத வகையில், அந்த ராக்கெட்டின் மேல்பகுதி, சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. அதன் சுழற்சி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எம்.ஓ.டி.ஆர்., 'ரேடார்' வாயிலாக கண்காணிக்கப்பட்டது. அது, படிப்படியாக விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்தது.
அப்போது, வளி மண்டல காற்றுடன் உரசியதால் ஏற்பட்ட வெப்பத்தால், பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாயின. மீதமிருந்த சில பாகங்கள் மட்டும், கடந்த ஜூலை 30ம் தேதி, அட்லான்டிக் பெருங்கடலில் விழுந்ததை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' உறுதி செய்துள்ளது.
வழக்கமாக, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய பின், ராக்கெட்டின் பாகங்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் விண்வெளி கழிவுகளாக சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த கழிவுகள், ஏவப்படும் செயற்கைக்கோள்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும். அதை தவிர்க்கும் வகையில், சரியான திட்டமிடலால், வெறும் ஒன்பது மாதங்களிலேயே, ராக்கெட்டின் மேல்பாகத்தை பூமிக்கு கொண்டு வந்து, இஸ்ரோ அழித்துள்ளது.
