'மூடா' முறைகேடு வழக்கு: தீர்ப்புக்கு காத்திருக்கும் அரசியல் தலைவர்கள்
'மூடா' முறைகேடு வழக்கு: தீர்ப்புக்கு காத்திருக்கும் அரசியல் தலைவர்கள்
ADDED : செப் 18, 2024 01:42 AM

பெங்களூரு : 'மூடா' முறைகேடு வழக்கில், தன் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதிக்கு தடை கோரி, முதல்வர் சித்தராமையா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு எப்போது வரும் என்று அரசியல் தலைவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
'மூடா' முறைகேடு குறித்து, முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஆக., 17ம் தேதி அனுமதி அளித்தார். இந்த அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடும்படி வலியுறுத்தி, முதல்வர் தரப்பில், ஆக., 19ம் தேதி உயர் நீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீது, முதல்வர் தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, உயர்நீதிமன்ற மூத்த வக்கீல் ரவிவர்மா குமார், கவர்னர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, புகார்தாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் என அனைத்து தரப்பு வாதங்களும், இம்மாதம் 12ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். அக்டோபர் 2ம் தேதி முதல் நீதிமன்றத்துக்கு தசரா விடுமுறை உள்ளது. எனவே அதற்குள் தீர்ப்பு வழங்க வேண்டி உள்ளது என்று நீதிபதி ஏற்கனவே கூறி இருந்தார்.
முதல்வர், கவர்னர் என யாருக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும், மற்றொரு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உறுதி. இதற்காக, இரண்டு தரப்பு வக்கீல்களும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், தீர்ப்பு எப்போது வரும் என்று அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தீர்ப்பு வெளியானால், கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு ஏற்படுவது உறுதி.

