நிலக்கரி சுரங்க வெடி விபத்து 16 தொழிலாளர்கள் பலி
நிலக்கரி சுரங்க வெடி விபத்து 16 தொழிலாளர்கள் பலி
ADDED : பிப் 06, 2026 01:03 AM
ஷில்லாங்: மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியாவில், சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் பலியாகினர்.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மாவட்டத்தில் தங்சுகு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. ஒரு ஆள் மட்டும் உள்ளே செல்லும் வகையில் தோண்டப்படும் இவை, 'எலி வளை' சுரங்கங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
இங்கு, நிலக்கரி தோண்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி, 16 தொழிலாளர்கள் பலியாகினர். வெடி விபத்து நிகழ்ந்தபோது, சுரங்கத்திற்குள் எத்தனை பேர் இருந்தனர் என்ற விபரம் தெரியவில்லை. எனினும், மேலும் சிலர் வெடி விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வெடி விபத்து குறித்து மாவட்ட எஸ்.பி., விகாஸ் குமார் கூறுகையில், “இந்த சுரங்கம் சட்ட விரோதமாக இயங்கி வந்துள்ளது உறுதியாகியுள்ளது. வெடி விபத்தில் இறந்தவர்கள் சிலர் அசாமை சேர்ந்தவர்கள். எனினும் அடையாளம் காணப்படவில்லை,” என்றார்.

