ADDED : ஜன 23, 2025 05:03 AM
பெங்களூரு: கன்னட திரையுலகில், பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கேரள திரையுலகில் நடிகையருக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் அறிக்கையில் நடிகையருக்கு, நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டிருந்தது.
அந்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட பின், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட நடிகையர் போலீசில் தைரியமாக புகார் அளித்தனர். ஹேமா கமிட்டி போன்று, கன்னட திரையுலகில் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டுமென, கன்னட திரைப்பட வர்த்தக சபையிடம் சில நடிகையர் கோரிக்கை வைத்தனர். ஆனால், கமிட்டி அமைப்பதில் வர்த்தக சபையினர் தயக்கம் காட்டினர்.
கமிட்டி அமைக்கும்படி, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரியும் இரண்டு முறை கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், ஒரு வழியாக தற்போது பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க, கன்னட திரைப்பட வர்த்தக சபை கமிட்டி அமைத்துள்ளது.
கன்னட நடிகை அனிதா ராணி தலைமையிலான கமிட்டியில் வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு, தயாரிப்பாளர்கள் குமார், சுரேஷ், வர்த்தக சபை முன்னாள் தலைவர் சா.ரா.கோவிந்த், சமூக ஆர்வலர்கள் அன்னபூர்ணா, நாகராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
குழு அமைக்கப்பட்டுள்ளதால், யார் மீது எந்த நடிகை பாலியல் புகார் கூறுவரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

