தந்தை சொத்துகள் அபகரிப்பு மகள் உட்பட நால்வர் மீது புகார்
தந்தை சொத்துகள் அபகரிப்பு மகள் உட்பட நால்வர் மீது புகார்
ADDED : மார் 17, 2024 07:26 AM
சித்தாபுரா: தந்தைக்கு சொந்தமான சொத்துகளை, மோசடி செய்து அபகரித்ததாக மகள் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரின் சித்தாபுராவில் வசிப்பவர் வெங்கடப்பா லட்சுமி நாராயண், 60. இவர் 'நாரிமன் ஷெல்டர் பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'நவ நாரிமன்' என்ற இரண்டு நிறுவனங்கள் வைத்திருந்தார். இதன் இயக்குனராகவும் தலைவராகவும் இருந்தார்.
இவருக்கு பரத்வாஜ் என்ற மகனும், தேஜவதி விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
வெங்கடப்பா லட்சுமி நாராயணுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது; படுத்த படுக்கையானார். நிறுவனங்களின் பொறுப்பை மகன் பரத்வாஜிடம் ஒப்படைத்து, நிர்வாக இயக்குனராக நியமித்தார். பொறுப்பேற்ற அவர், நிறுவனங்களின் வரவு, செலவு, பண பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வில், நிறுவனத்தின் தலைமை கணக்காளர் சவுடரெட்டியும், ஆடிட்டர் மோகனும் கூட்டு சேர்ந்து, மோசடி செய்து பொய்யான கணக்கு காண்பித்து, 10 முதல் 15 கோடி ரூபாய் சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி வெங்கடப்பா லட்சுமி நாராயணின் மகள் தேஜவதி விஜயலட்சுமி, பிரேமா என்பவருடன் சேர்ந்து, வெங்கட லட்சுமி நாராயணின் பெயரை மோசடி செய்து, அவருக்கு சொந்தமான ஷேர்களை, தங்களின் பெயருக்கு மாற்றிக்கொண்டதும் தெரிந்தது.
உடல் நலம் சரியில்லாத தந்தையை, சட்டவிரோதமாக வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ள தேஜவதி விஜயலட்சுமி, தன் சகோதரர் பரத்வாஜை, தந்தையை சந்திக்க விடுவதில்லை. தந்தைக்கு ஏதேதோ மருந்துகள் கொடுத்து இம்சிப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சகோதரி தேஜவதி, பிரேமா, சவுடரெட்டி, மோகன் ஆகியோர் மீது, சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் பரத்வாஜ் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

