பா.ஜ., - எம்.பி., ஆதரவாளர் படுகொலை கூலிப்படை வைத்து கொன்றதாக புகார்
பா.ஜ., - எம்.பி., ஆதரவாளர் படுகொலை கூலிப்படை வைத்து கொன்றதாக புகார்
ADDED : மார் 02, 2024 04:10 AM

கலபுரகி : கலபுரகி பா.ஜ., - எம்.பி., உமேஷ் ஜாதவ் ஆதரவாளர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கலபுரகி மாவட்டம், அப்சல்பூரின் சாக்னுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் சக்ரா, 31. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், பா.ஜ., யுவ மோர்ச்சா உறுப்பினர். பா.ஜ., - எம்.பி., உமேஷ் ஜாதவுக்கு நெருக்கமானவர்.
கடந்த வாரம் பி.எஸ்.என்.எல்., ஆலோசனை கமிட்டி உறுப்பினராக கிரிஷ் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் பார்ட்டிக்கு அழைத்துள்ளதாகக் கூறி, அதே கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார். இரவில் வீடு திரும்பவில்லை.
மறுநாள் காலையில், ரத்த வெள்ளத்தில் கிரிஷ் இறந்துகிடப்பதை பார்த்த அப்பகுதியினர், கங்காபூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணையில், கிரிஷின் குடும்பத்தினர், மூன்று பேர் மீது சந்தேகம் தெரிவித்தனர். கிரிஷை கொல்வதற்கு முன்பு, அவர் கண்களில் மிளகாய் பொடியை துாவியது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார், மூன்று தனிப்படை அமைத்து உள்ளனர்.
கிரிஷ் சகோதரர் சதாசிவா சக்ரா கூறுகையில், ''அரசியலில் வேகமாக வளர்ந்து வரும் கிரிஷின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், கூலிப்படையினரை ஏவிக் கொலை செய்துள்ளனர். எங்கள் சமுதாய தலைவர்களே ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.
பா.ஜ., - எம்பி., கூறுகையில், ''கிரிஷின் இறப்பு, கலபுரகிக்கு பேரிழப்பாகும். திறமையான தலைவர். என்னுடன் பத்து ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். கலபுரகி மாவட்டத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது,'' என்றார்.
நேற்று முன்தினம் தான் இதே மாவட்டத்தின் சரசம்பா கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் மகாந்தப்பா சித்தராமப்பா கொல்லப்பட்டார். அன்றிரவே கிரிஷ் கொலை செய்யப்பட்டது மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

