ADDED : டிச 17, 2024 11:47 PM
பெலகாவி; சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கவுடா மறைவுக்கு, கர்நாடக சட்டசபை, மேல்சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நேற்று கூட்டத்தொடர் தொடங்கியதும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கவுடா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை, சபாநாயகர் காதர் கொண்டு வந்தார்.
அவர் பேசியதாவது:
பழங்குடி சமூகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், துளசி கவுடா. சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். மரங்களை பற்றி அனுபவம், பரந்த அறிவும் கொண்டவர். காடுகளின் காலை களஞ்சியம், மரங்களின் தாய் என்ற பிரபலமாக அறியப்பட்டார்.
மரங்களை பற்றி தெளிவாக விளக்கிச் சொல்லும் திறமை பெற்றவர். 65 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டார்.
சிறு வயதிலேயே கணவரை இழந்த அவர், தன் குழந்தைகள், குடும்பங்களாக மரங்களை பார்த்தார். லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்ததற்காக 2021ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், இரங்கல் தீர்மானத்தின் மீது சட்டசபை விவகார அமைச்சர் எச்.கே., பாட்டீல், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்ளிட்டோர் பேசினர். இதைத்தொடர்ந்து சபையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேல் சபையில் துளசி கவுடா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சித் தலைவரும், சிறிய நீர்ப்பாசன அமைச்சருமான போசராஜு, எதிர்க்கட்சித் தலைவர் சலுவாதி நாராயணசாமி ஆகியோர் பேசினர். பின், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.