ADDED : மார் 13, 2024 03:04 PM

சண்டிகர்: ஹரியானா சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. புதிய முதல்வராக பா.ஜ.,வை சேர்ந்த நயாப் சிங் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று(மார்ச் 13) நம்பிக்கை ஓட்டெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார். பா.ஜ., அரசு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
ஹரியானாவில், 2014ல் பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. பெரிய அளவில் பிரபலமில்லாத மனோகர் லால் கட்டார் முதல்வரானார். கடந்த 2019ல் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பா.ஜ., 41ல் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி., 10 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 30 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளம் மற்றும் ஹரியானா லோஹித் கட்சி, தலா ஒரு இடங்களில் வென்றன.
இதையடுத்து, ஜே.ஜே.பி., மற்றும் ஏழு சுயேச்சைகளில், ஆறு பேரின் ஆதரவுடன் மனோகர் லால் கட்டார் மீண்டும் முதல்வரானார். துஷ்யந்த் சவுதாலா, துணை முதல்வரானார்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் பல பரபரப்பு அரசியல் காட்சிகள் அரங்கேறின. ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சியுடனான கூட்டணியை பா.ஜ., முறித்தது. முதல்வர் மனோகர் லால் கட்டார் அமைச்சரவை ராஜினாமா செய்தது. சுயேச்சைகள் ஆதரவுடன் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைத்தது. ஆனால் யாரும் எதிர்பாராத திருப்பமாக முதல்வர் மாற்றப்பட்டார். பா.ஜ., மாநில தலைவர் நாயப் சிங் சைனி புதிய முதல்வராக பதவியேற்றார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு
இந்நிலையில், புதிய முதல்வராக பா.ஜ.,வை சேர்ந்த நயாப் சிங் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று(மார்ச் 13) நம்பிக்கை ஓட்டெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார். 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பா.ஜ.,வை சேர்ந்த 41 எம்.எல்,ஏக்களும், ஏழு சுயேச்சை எம்.எல்,ஏக்களில் 6 பேரும், லோஹித் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் என மொத்தம் 48 எம்.எல்.ஏ.,க்கள் நயாப் சிங் சைனிக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை
சட்டசபையில் முதல்வர் நயாப் சிங் சைனி பேசியதாவது: நான் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன். என் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை. நான் பா.ஜ., கட்சிக்காரன். இன்று எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

