ADDED : ஜன 18, 2024 04:58 AM

நகர வாழ்க்கையில் இருந்து விலகி புத்துணர்ச்சியுடன் இருக்க தட்சிண கன்னடாவின் சோமேஸ்வரா கடற்கரைக்குச் செல்லலாம்.
கர்நாடகாவில் 320 கி.மீ., நீளமுள்ள கடற்கரையோரம் பல அழகான கடற்கரைகள் உள்ளன. அதில், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் இருந்து 17 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ளது சோமேஸ்வரா கடற்கரை. பைந்துார், உல்லால் நகரங்களுக்கு இடையே கடற்கரை அமைந்துள்ளது.
இங்கு சூரியன் அஸ்தமனத்தின் பார்வையிட்ட சிறந்த இடமாகும். அத்துடன் நேத்ராவதி ஆறு, அரபிக்கடலில் சங்கமிக்கும் இடத்தில் இந்த கடற்கரை அமைந்து உள்ளது.
மங்களூரில் இருந்து செல்லும் வழியில் உள்ள பசுமை, கடற்கரையை ஒட்டி தென்னை மரங்கள், இந்த கடற்கரையை பயணியரின் பயண திட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக மாற்றுகிறது.
மங்களூரு ஆண்டு முழுதும் வெப்பமான, ஈரப்பதமான கால நிலையை கொண்டு உள்ளது. ஆண்டுக்கு நான்கு மாதங்களுக்கு கனமழையை பெய்கிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஈரப்பதம் தாங்கக்கூடிய அளவில் இருக்கும் போது, பார்வையிட சிறந்த நேரமாகும்.
தங்க நிறத்தில் காணப்படும் மணலில் நடைபயிற்சி செய்யலாம், சூரிய குளியல் செய்ய ஏற்றது. சோமேஸ்வரா கடற்கரை 'ருத்ர ஷைலே' என்றும் அழைக்கப்படுகிறது.
கடற்கரையில் உள்ள பெரிய பாறைகளுக்கு பிரபலமானது. அதிக அலையின் போது, பாறைகள் மீது மோதி எழும் நீரை பார்க்கவே பலரும் வருகை தருவர்.
நேத்ராவதி நதி அரபிக் கடலில் சங்கமிக்கும் பகுதியை ஒட்டி, மலை அமைந்துள்ளது. இந்த மலையில், மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் வளர்கின்றன.
கடற்கரையில் பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், இங்கு நீச்சல் அடிக்க வாய்ப்பில்லை.
கடற்கரையின் வடக்கு பகுதியில் பழமையான சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் உல்லாலின் ராணி அப்பக்கா தேவியால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இயற்கை அதிசயமாக நாகதீர்த்த வடிவில் உள்ளது. கோவில் அருகில் உள்ள குளத்தில் வற்றாத நிலத்தடி அமைந்து உள்ளது.
எப்படி செல்வது
பெங்களூரில் இருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையம் சென்றடையலாம். அங்கிருந்து 17 கி.மீ., தொலைவில் டாக்சி அல்லது பஸ் மூலம் சென்றடையலாம்.
அதுபோன்று மங்களூரு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 22 கி.மீ., பயணம் செய்து கடற்கரை சென்றடையலாம்.
கடற்கரை அருகிலேயே ரிசார்ட், ஹோட்டல்கள் அமைந்து உள்ளன
- நமது நிருபர் -.