நீடிக்கும் குழப்பம்!: ஐ.நா., கூட்டத்திற்கு அமெரிக்கா செல்வாரா மோடி? டிரம்ப் அழுத்தத்தால் நெருக்கம் காட்டும் சீனா, ரஷ்யா
நீடிக்கும் குழப்பம்!: ஐ.நா., கூட்டத்திற்கு அமெரிக்கா செல்வாரா மோடி? டிரம்ப் அழுத்தத்தால் நெருக்கம் காட்டும் சீனா, ரஷ்யா
UPDATED : ஆக 14, 2025 10:05 AM
ADDED : ஆக 14, 2025 12:56 AM

புதுடில்லி: அமெரிக்கா உடனான வர்த்தக உறவில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அடுத்த மாதம் அங்கு நடக்கும் ஐ.நா., பொது சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையே, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அடுத்த வாரம் டில்லி வருகிறார். நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வரும் 18 - 21ம் தேதி வரை ரஷ்யா செல்கிறார்.
அமெரிக்க அழுத்தத்தை தொடர்ந்து, சீனா, ரஷ்யா உடனான நம் உறவில் நெருக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதில், 25 சதவீதம் கடந்த 7ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், மீதமுள்ள 25 சதவீதம், வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாலேயே, நம் நாட்டுக்கு இந்த வரியை விதித்ததாக டிரம்ப் தெரிவித்தார். இது நியாயமற்றது எனக் கூறி வரி விதிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது.
அழைப்பு
இருப்பினும், இந்த வரி விதிப்பால் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள், நம்முடன் நெருக்கம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது.
இதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் செப்., 23ம் தேதி முதலே அங்கு முகாமிட துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் நடக்கும் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசவுள்ளார். ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 26ம் தேதி, பொது சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரலில், அதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு பிரச்னையால், இந்தியா - அமெரிக்கா உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது. இதில், கலந்து கொள்வது குறித்து பிரதமர் எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவிர்ப்பு
கூட்டத்தில் பங்கேற்பதன் வாயிலாக, அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக சந்திக்க வேண்டி வரும் என்பதாலேயே, கூட்டத்தில் பங்கேற்பதை பிரதமர் தவிர்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்தாண்டு நடந்த கூட்டத்தின்போது, பிரதமர் மோடி பங்கேற்பார் என சொல்லப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த ஆண்டும், இதே நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.