காங்., - எம்.பி., மனைவியின் பாக்., தொடர்பு குறித்து விசாரணை
காங்., - எம்.பி., மனைவியின் பாக்., தொடர்பு குறித்து விசாரணை
ADDED : பிப் 16, 2025 01:53 AM

குவஹாத்தி: ''காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவர் கவுரவ் கோகோய் மனைவி எலிசபெத்துக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்படும்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.
காங்கிரசைச் சேர்ந்த கவுரவ் கோகோய், லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ளார். இவருடைய தந்தை தருண் கோகோய், அசாம் முதல்வராக இருந்தவர்.
கவுரவ் கோகோய், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிறந்த எலிசபெத் கோல்பர்னை, 2013ல் திருமணம் செய்தார்.
எலிசபெத் கோல்பர்னுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இருப்பதாக, பா.ஜ., மூத்த தலைவர் அஜய் அலோக் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து பா.ஜ.,வைச் சேர்ந்த, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று கூறியதாவது:
இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. பாகிஸ்தான் உளவு அமைப்புடன், முன்னாள் முதல்வரின் மருமகளுக்கு தொடர்பு இருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
எலிசபெத் கோல்பர்ன், பாகிஸ்தானுக்கு பலமுறை சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கவுரவ் கோகோய் அதுபோல் சென்றுள்ளாரா என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது.
இதைத் தவிர, தருண் கோகோய் முதல்வராக இருந்தபோது, ஆட்சியில், ஐ.எஸ்.ஐ.,யின் ஆதிக்கம், தொடர்பு இருந்ததா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால், இது தொடர்பாக முறையாகவும், தீவிரமாகவும் விசாரிக்கப்பட வேண்டும். அதற்காக, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

