பேச்சு சுதந்திரத்தை குறைக்க அரசியலமைப்பை திருத்தியது காங்.,: அமித்ஷா சாடல்
பேச்சு சுதந்திரத்தை குறைக்க அரசியலமைப்பை திருத்தியது காங்.,: அமித்ஷா சாடல்
UPDATED : டிச 17, 2024 09:44 PM
ADDED : டிச 17, 2024 09:41 PM

புதுடில்லி: '' பேச்சு சுதந்திரத்தை குறைக்கும் வகையில் காங்கிரஸ் முதன்முறையாக அரசியலமைப்பை திருத்தி 19 ஏ சட்டப்பிரிவை சேர்த்தது ,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 வது ஆண்டை முன்னிட்டு ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: இந்த விவகாரம் குறித்து பார்லிமென்டின் இரு அவைகளில் நடந்த விவாதம் இளைஞர்களுக்கு மிகுந்த பயனுள்ளது. எந்த கட்சி அரசியலமைப்பை கவுரவித்தது என்பதை பற்றி மக்கள் புரிந்து கொள்ள முடியும். படேலின் கடுமையான உழைப்பு காரணமாக, நாம் எழுச்சி பெற்றுள்ளதுடன், உலகம் முன்பு ஒரே நாடாக இருக்கிறோம்.
75 ஆண்டுகளில் பல நாடுகள் சுதந்திரம் பெற்று புதிய அத்தியாயத்தை துவக்கின. ஆனால், அங்கு ஜனநாயகம் வெற்றி பெறவில்லை. ஆனால், நமது ஜனநாயகம் வேரூன்றியது. ஒரு துளி ரத்தம் சிந்தாமல், நாம் பல மாற்றங்களை செய்தள்ளோம். பல சர்வாதிகாரிகளின் ஆணவத்தை, மக்கள் ஜனநாயக முறையில் தகர்த்து எறிந்துள்ளனர்.
பொருளாதார ரீதியாக நம்மால் சுதந்திரம் பெற முடியாது எனக்கூறியவர்களுக்கு நமது நாடும், அரசியலமைப்பும் உரிய பதிலடி கொடுத்து உள்ளது. இன்று நாம் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். பிரிட்டனை முந்தி உள்ளோம்.
வீர் சாவர்க்கரை இந்திரா புகழ்ந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களையும், நாட்டிற்காக தியாகம் செய்தவர்களையும் எந்த மதத்துனும், கொள்கை உடனும் தொடர்பு படுத்தாதீர்கள். காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்குவதற்கு உறுதியான நம்பிக்கை தேவை. அச்சட்டம் நீக்கப்பட்ட போது ரத்த ஆறு ஓடும் என்றனர். ஆனால், ஒரு கல் கூட விசப்படவில்லை.
அரசியல்சானத்தின் மனதாக சமநிலை உள்ளது. பொது சிவில் சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது.முதல்முறையாக 1951 ஜூன் 18 ல் அரசியலமைப்பு முதல்முறையாக திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பொதுத்தேர்தலை சந்திக்கும் வரை காத்திருக்க காங்கிரஸ் விரும்பவில்லை. பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காக 19 ஏ -சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. அக்கட்சி 77 முறை அரசியலமைப்பை திருத்தி உள்ளது. நாங்கள் 22 முறை திருத்தம் செய்துள்ளோம்.
ஒரே நாளில் இரண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்தன. மஹாராஷ்டிராவில் தோல்வியடைந்ததும், மின்னணு ஓட்டு இயந்திரத்தை குறை சொன்னார்கள். ஜார்கண்டில் வெற்றி பெற்றதும் நல்ல உடை அணிந்து பதவியேற்றனர். இதற்கு அவர்கள் கொஞ்சம் வெட்கப்பட வேண்டும். மக்கள் உங்களை கவனிக்கிறார்கள். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

