கேரளா, தெலுங்கானா, திரிபுரா உட்பட 8 மாநிலங்களில் காங்., தேர்தல் பணிக்குழு
கேரளா, தெலுங்கானா, திரிபுரா உட்பட 8 மாநிலங்களில் காங்., தேர்தல் பணிக்குழு
ADDED : ஜன 08, 2024 03:58 AM

புதுடில்லி : கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், திரிபுரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் தேர்தல் பணிக்குழுக்களை காங்கிரஸ் அமைத்துள்ளது. இது தவிர மத்திய பிரதேசத்துக்கு அரசியல் விவகார குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
ஒப்புதல்
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் ராஜஸ்தான், கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஹிமாச்சல், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களுக்கு தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க கட்சி தலைவர் ஒப்புதல் அளித்துஉள்ளார்.
இது தொடர்பாக கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ராஜஸ்தான் மாநில காங்., தலைவர் கோவிந்த் சிங் தோத்தாஸ்ரா கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த குழுவில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மகேந்திரஜித் மாளவியா, மோகன் பிரகாஷ், சி.பி.ஜோஷி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் கேரள மாநில காங்., தலைவர் சுதாகர், அந்த மாநில தேர்தல் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த குழுவில் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, வயலார் ரவி, சசிதரூர், சதீஷன், சுரேஷ், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விவகாரக்குழு
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி மாநில தேர்தல் குழு தலைவராகவும், உறுப்பினர்களாக துணை முதல்வர் விக்ரமார்கா மல்லு, உத்தம் குமார் ரெட்டி, ஹனுமந்த ராவ் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர்.
இதே போல் ஹிமாச்சலில் காங்., மாநில தலைவர் பிரதிபா சிங் தேர்தல் பணிக்குழு தலைவராகவும், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.
மத்தியபிரதேசத்தில் ஜிது பட்வாரி தேர்தல் பணிக்குழு தலைவராகவும், திக் விஜய் சிங், முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநிலத்தில் ஜிதேந்திர சிங் தலைமையில் அரசியல் விவகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் தீபக் பாய்ஜ், மணிப்பூரில் மேகசந்திரா சிங், நாகலாந்தில் சுபோங் மெரன் ஜமீர், திரிபுராவில் ஆசிஷ் குமார் சஹா ஆகியோர் அந்தந்த மாநில தேர்தல் பணிக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.