பா.ஜ.,வின் 'சூப்பர் செய்தி தொடர்பாளர்' சசி தரூர் பேச்சால் காங்கிரஸ் கடுப்பு
பா.ஜ.,வின் 'சூப்பர் செய்தி தொடர்பாளர்' சசி தரூர் பேச்சால் காங்கிரஸ் கடுப்பு
ADDED : மே 29, 2025 12:35 AM

புதுடில்லி: தங்கள் சொந்த கட்சி எம்.பி.,யான சசி தரூரை 'பா.ஜ.,வின் சூப்பர் செய்தி தொடர்பாளர்' என காங்கிரஸ், கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்., மூத்த தலைவரும் லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர், சமீபகாலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் பாராட்டி வருகிறார். இந்தியா -- பாக்., போரின்போது, மோடியை புகழ்ந்தார்.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்க, மத்திய அரசு அமைத்த எம்.பி.,க்கள் குழுக்களில் ஒன்றுக்கு சசி தரூர், தலைவராக நியமிக்கப்பட்டார். காங்., எதிர்ப்பை மத்திய அரசு புறக்கணித்தது.
சசி தரூர் தலைமையில் பா.ஜ., தெலுங்கு தேசம், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் குழு, அமெரிக்கா, கயானா, பனாமா நாடுகளுக்கு சென்றது.
அந்த நாடுகளின் எம்.பி.,க்கள், செய்தி நிறுவனங்கள், இந்திய வம்சாவளியினர் உட்பட பல தரப்பினரை சந்தித்தனர்.
பனாமாவில் பேட்டியளித்த சசி தரூர், 'இதற்கு முன், எல்லை கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டிச் சென்று இந்தியா தாக்கியதில்லை. கார்கில் போரின்போது கூட, எல்லையை தாண்டவில்லை.
'ஆனால், 2015ல் 'உரி சர்ஜிகல் ஸ்டிரைக்'கை நடத்தியது. 2019ல் புல்வாமா தாக்குதலின்போதும், அது தொடர்ந்தது' என்றார்.
இந்த கருத்து, காங்., தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில், 2004 - 14 வரையிலான மன்மோகன் சிங் தலைமையிலான காங்., கூட்டணி ஆட்சியில் மும்பை, பெங்களூரு, டில்லி என பல இடங்களில் பாக்., பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தியபோதிலும் எந்த பதிலடியும் தரப்படவில்லை.
காங்., மூத்த தலைவர் உதித்ராஜ், ''பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக, பா.ஜ., தலைவர்கள் கூட பேசாதவற்றை எல்லாம், சசி தரூர் பேசுகிறார்.
''அவர், 'பா.ஜ.,வின் சூப்பர் செய்தி தொடர்பாளராகி விட்டார். நம்முடைய படையினருக்கு சேர வேண்டிய பெருமைகளை எல்லாம், பிரதமர் மோடியை குறிப்பிட்டு சசி தரூர் பேசி வருகிறார்,” என ஆவேசமாக நேற்று தெரிவித்தார்.