காங்கிரஸ் அரசின் வளர்ச்சி பணி பா.ஜ., - ம.ஜ.த.,வினர் மனமாற்றம்
காங்கிரஸ் அரசின் வளர்ச்சி பணி பா.ஜ., - ம.ஜ.த.,வினர் மனமாற்றம்
ADDED : பிப் 27, 2024 06:47 AM

பெலகாவி, : ''காங்கிரஸ் அரசின் வளர்ச்சிப் பணிகளை பாராட்டி, பா.ஜ., - ம.ஜ.த., வினர் காங்கிரசில் சேருகின்றனர்,'' என, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவியின் எம்கன்மரடி தொகுதிக்கு உட்பட்ட ஹூடலி கிராமத்தில் நேற்று ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி துவக்கிவைத்தார். அப்போது பா.ஜ., - ம.ஜ.த.,வை சேர்ந்த பலர், சதீஷ் ஜார்கிஹோளி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
அவர் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில், மாநிலம் முழுதும் உள்ள கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளை பார்த்து, பா.ஜ., - ம.ஜ.த., கட்சியை சேர்ந்தவர்கள், அக்கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொண்டர்கள் உண்மையாக உழைத்தால், எதிர்காலத்தில் மேலும் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பா.ஜ., - ம.ஜ.த.,வில் மக்களுக்கு வேலையில்லை. பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதே பா.ஜ.,வின் வேலை. எங்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகளை பார்த்து, அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எம்கன்மரடி, ஹுடலி கிராமத்திற்கு வளர்ச்சிப் பணிகள் புதிதல்ல. கிராமத்தில் எப்போது பிரச்னை வந்தாலும் தீர்வு காணப்படும்.
கர்நாடகாவில் அதிகளவில் மானியங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. 15 ஆண்டுகளில் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் வசதி, சாலை பணிகளுடன் பள்ளிகள் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி முன்னிலையில் பா.ஜ., - ம.ஜ.த.,வை சேர்ந்த பலர் காங்கிரசில் இணைந்தனர். இடம்: பெலகாவி.
