போரை அரசியலாக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
போரை அரசியலாக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
UPDATED : மார் 11, 2026 07:19 PM
ADDED : மார் 11, 2026 04:06 PM

எர்ணாகுளம்: உலகளாவிய பிரச்னை நடக்கும் நிலையில், அதனை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்காசியாவில் தற்போது நடப்பது குறித்து அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான நமது சகோதரர் மற்றும் சகோதரிகள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது எல்லாம் நமது நாட்டு மக்களுக்கு பிரச்னை வருகிறதோ, அப்போது அவர்களை பாதுகாக்க நாங்கள் அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகிறோம். இன்றைய இந்தியா, நாட்டு மக்களை பிரச்னையில் தள்ளாது. போரில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அளித்துள்ளோம்.
வளைகுடாவில் உள்ள நமது நட்பு நாடுகள், நமது குடிமக்களின் நலன்களை பாதுகாத்து வருவது எனக்கு திருப்தி அளிக்கிறது. நமது தூதரகங்கள் 24 மணிநேரமும் அவர்களுக்கு உணவு, வசிப்பிடம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
உலகளாவிய பிரச்னை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேண்டும் என்றே, ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.இதனால், நமது மக்கள் அங்கு சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் மோடியை திட்டுவார்கள். இது தான் அவர்களின் எண்ணம்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தீர்கள். தற்போது, உங்களுக்கு சேவை செய்ய பாஜ தலைமையிலான தேஜ கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். வளர்ந்த கேரள மாநிலத்தை நீங்கள் பார்ப்பீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

