கேரள முதல்வரின் கான்வாயை மறித்த காங்., பிரமுகர் கைது
கேரள முதல்வரின் கான்வாயை மறித்த காங்., பிரமுகர் கைது
UPDATED : ஆக 29, 2026 07:09 PM
ADDED : ஆக 29, 2026 07:02 PM

திருவனந்தபுரம்: காங்கிரசைச் சேர்ந்த கேரள முதல்வர் சதீசனின் வாகனத்தை மறித்த புகாரில், அக்கட்சி பிரமுகர் அனில் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க, தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள செம்பழந்தி என்ற இடத்தை நோக்கி, கேரள முதல்வர் சதீசன் ஆகஸ்ட் 28 மாலை சென்றார். செந்தி என்ற இடத்தில், ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு மற்றொரு குழுவினரும் ஏற்பாடு செய்தனர்.
அப்பகுதி வழியாக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் வந்த போது, திடீரென ஒரு வாகனத்தை, 10க்கும் மேற்பட்டோர் மறித்தனர். வாகனத்தில் இருந்து கீழிறங்கிய முதல்வர் சதீசனை நோக்கி, அங்கிருந்த மாவட்ட காங்., பிரமுகர் அனில் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சில நிமிடங்களுக்கு பின், முதல்வர் சதீசன் வாகனத்தில் ஏறி புறப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, காங்கிரசில் இருந்து அனில் குமார் நீக்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'முதல்வர் சதீசனின் பாதுகாப்பு வாகனத்தை மறித்ததோடு, அவரை மிரட்டும் தொனியில் அனில் குமார் பேசினார். ஆவேசமாக கையை நீட்டி பேசி, முதல்வரை பொது இடத்தில் அவமதித்தார். சம்பவ இடத்தில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அளித்த புகாரின்படி அவரை கைது செய்தோம். அவர் மீது ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ரவுடிகளின் பட்டியலிலும் அவரது பெயர் உள்ளது' என்றனர்.
