கண்டம் தப்பினார் காங்கிரஸ் தலைவர்; தபால் ஓட்டில் தலை தப்பியது!
கண்டம் தப்பினார் காங்கிரஸ் தலைவர்; தபால் ஓட்டில் தலை தப்பியது!
ADDED : நவ 24, 2024 09:29 AM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி வெறும் 49 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன்மூலம், மஹாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்த நிலையில், சகோலி தொகுதியில் போட்டியிட்ட மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கடைசி நேரத்தில் வெற்றி வாகை சூடினார்.
10வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் அவினாஷ் பிரமான்கரை விட நானா படோல் 476 ஓட்டுக்கள் பின்தங்கியிருந்தார். பின்னர், 15வது சுற்றின் முடிவில் 535 ஓட்டுக்கள் முன்னிலை பெற்றார்.
கடைசி சுற்றான 28வது சுற்றின் முடிவில் மீண்டும் 658 ஓட்டுக்களில் பின்தங்கினார் படோல். அதன்பிறகு, தபால் ஓட்டுகளும், சில சுற்றுகளின் ஓட்டுக்களை மறு எண்ணிக்கை செய்ததில், கூடுதல் ஓட்டுக்கள் குவிந்தன. இதனால், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பு நிலவியது. இறுதியில், படோல் 208 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.