காங்கிரஸ் கூட்டத்தில் ஒலித்த வங்கதேச தேசியகீதம்; கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
காங்கிரஸ் கூட்டத்தில் ஒலித்த வங்கதேச தேசியகீதம்; கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : அக் 29, 2025 10:32 PM

கவுகாத்தி: அசாமில் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் வங்கதேச தேசியகீதத்தை பாடியது பெரும் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளிகள் அதிகம் வாழும் ஸ்ரீபூமி மாவட்டத்தில் பராக் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கதேசத்தின் தேசிய கீதமான 'அமார் சோனார் பாங்லா' பாடலை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பாடியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது. பாஜ உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, 'வங்கதேச தேசிய கீதத்தை பாடியதை ஒருபோதும் ஏற்க முடியாது. தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளேன். சட்டத்தில் உள்ள விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்,' என்றார்.
அதேவேளையில், இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தேசிய கீதங்களை எழுதிய ரவீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வங்கதேச தேசிய கீதத்தின் இரு வரிகள் மட்டுமே பாடப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

