தங்கவயலில் அனைவருக்கும் வீடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா சபதம்
தங்கவயலில் அனைவருக்கும் வீடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா சபதம்
ADDED : மார் 02, 2024 04:28 AM

தங்கவயல், : ''தங்கவயல் தொகுதியில் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே எனது கனவு திட்டம். நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு,'' என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
அரசின் வாக்குறுதி திட்டங்கள் முறையாக கிடைக்கிறதா என கேட்கும் நேர்காணலும், மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியும் தங்கவயலில் நேற்று நடந்தது.
ஒரே நாளில் உரிகம் பேட்டை வாட்டர் டாங்க் அருகில் 18, 19, 20, 21வது வார்டுகளுக்கும்; ராபர்ட்சன்பேட்டை வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் 22, 23, 24 ஆகிய வார்டுகளுக்குமான நிகழ்ச்சி நடந்தது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பேசியதாவது:
தங்கவயலில் தங்கச் சுரங்கம் மூடிய பின்னர் 'வேலை -தேடுவதே வேலை' என இளைஞர்கள் பலர், வெளியூர்களுக்கு செல்வதை 20 ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து வருகிறோம். இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்க 1,000 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்தவர்கள் யாருமே இது போன்று செய்யவில்லை. தங்கவயல் மக்கள் வெளியூர் சென்று வேலை செய்த காலம் மாறி, வெளியூர்காரர்கள் தங்கவயலுக்கு வேலை செய்ய வந்து செல்லும் காலம் பிறக்கிறது.
தங்கச் சுரங்கத்தில் உழைத்து உருக்குலைந்தவர்கள் வாழும் இடத்தை யாரும் இழக்க விட மாட்டேன். இவர்கள் அனைவருக்கும் வீடு வழங்குவது எனது கனவு திட்டம். இதற்காக 200 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றேன். தாய் ஸ்தானத்தில் இருந்து அனைவருக்கும் வீடுகள் கிடைக்க செய்வேன்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். கல்வியில் தான் சமுதாய கவுரவம் உள்ளது.
அரசின் வாக்குறுதி திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இதற்காக அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம் என்பதற்காகவே அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் அழைத்து வந்துள்ளேன்.
வீடற்றவர்களுக்கு மனைகள் வழங்க விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது. இதனை பூர்த்தி செய்து நகராட்சியில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராபர்ட்சன் பேட்டை பிரசன்னா: சுவர்ணா நகரில் 1 முதல் 12-வது கிராஸ் வரை குடிநீர் பிரச்சினை உள்ளது. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. சொர்ணகுப்பம் ஏரியை சுத்தப்படுத்த வேண்டும். கால்வாய் திறந்து கிடப்பதால் கால்நடைகள் விழுந்து விடுகின்றன.
எம்.எல்.ஏ.,: குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சொர்ண குப்பம் ஏரி பகுதியில் 5 கோடி ரூபாய் செலவில் 'வாக்கிங் பார்க்' அமைக்கப்படும்.
சொர்ணா நகர் அருணாசலம்: சொர்ணா நகர், விவேக் நகர் பகுதியில் குரங்குகள், தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதன் மீது நகராட்சி கவனம் செலுத்த வேண்டும்.
ராபர்ட்சன்பேட்டை லட்சுமி: விதவை பென்ஷன் 800 ரூபாய் வருகிறது. அதுவும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. நிலுவை தொகையை வழங்குவது இல்லை. முழுமையாக வழங்க உதவி செய்ய வேண்டும்.
இது போன்று பலரும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ., காங்கிரஸ் ரூபகலா முன்னிலையில், மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது. இடம்: தங்கவயல்.

