பா.ஜ.,வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி
பா.ஜ.,வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி
UPDATED : பிப் 25, 2024 03:44 PM
ADDED : பிப் 24, 2024 02:08 PM

காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி, டில்லியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர் விஜய தரணி. அவர், பா.ஜ.,வில் இணைய இருப்பதாக சில தினங்களாக செய்திகள்வெளியாகின.
அதன்படி, டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் விஜயதரணி, நேற்று அக்கட்சியில் இணைந்தார்.
நீண்ட நாள் அதிருப்தி
பின், விஜயதரணி அளித்த பேட்டி: பல ஆண்டுகளாக, காங்கிரசில் இருந்துவிட்டு, தற்போது இந்த முடிவை எடுப்பது, சற்று கடினமாக உள்ளது என்பது உண்மை; அங்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. அக்கட்சியில் தலைமை பதவிக்கு, பெண்கள் வரவே முடியாது. தற்போது கூட, தமிழக சட்டசபை கட்சி தலைவர் பதவி என்னை விட, ஜூனியருக்கு தரப்பட்டுள்ளது. இந்த அதிருப்தி, நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
நான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். எனவே, பார்லிமென்ட்டிற்கு தேர்வாகி, அங்கு பணியாற்ற விரும்பினேன்.கடந்த, 1999ல் இருந்து, நான் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுக் கொண்டே இருந்தேன்; தரவில்லை. இம்முறையும், 'சீட்' தரமாட்டார்கள். கட்சியில் இருந்து விலகும், என் முடிவை தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் தலைமைக்கு, ராஜினாமா கடிதம் அனுப்பி விட்டேன். அனைத்து பதவிகளில் இருந்தும் வெளியேறி விட்டேன்.
பிரதமர் நரேந்திர மோடியின் மிகச் சிறந்த தலைமையை, தற்போது நாடே விரும்புகிறது. மத்திய அரசின் நலத் திட்டங்கள், மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அத்திட்டங்களில் அதிக பலன்களையும் அடைந்து வருகின்றனர். பிரதமரின் கரத்தை பலப்படுத்த வேண்டுமென்று நினைத்தேன். மேலும், பா.ஜ.,வில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. தேர்தல் அரசியலில், பெண்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும் கட்சியாக பா.ஜ., உள்ளது. எனவே தான், பிரதமர் தலைமையின் கீழ் பணியாற்ற, மிகவும் ஆர்வமாக வந்துள்ளேன்.
வேகமான வளர்ச்சி
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் யாத்திரை, அவரின் நடவடிக்கையால், பா.ஜ., தமிழகத்தில் வளர்ச்சி பாதையில் செல்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேனா, மாட்டேனா என்பது குறித்து தெரியாது. பா.ஜ., தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் முருகன் பேசும்போது, ''தமிழகத்தில் எங்கள் கட்சி வேகமாக வளர்கிறது. கடந்த வாரம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், 17 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர். அந்த வகையில், விஜயதரணி அக்காவையும் வரவேற்கிறேன்,'' என்றார்.

