அமைச்சர் பதவி கேட்டு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி! கர்நாடக காங்., மேலிட பொறுப்பாளரிடம் ஆவேசம்
அமைச்சர் பதவி கேட்டு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி! கர்நாடக காங்., மேலிட பொறுப்பாளரிடம் ஆவேசம்
ADDED : ஜூலை 02, 2025 01:18 AM

பெங்களூரு: கர்நாடக காங்., கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னைகளுக்கு, 'பஞ்சாயத்து' பேச வந்த மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவிடம் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பலரும், அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி துாக்கியுள்ளனர். இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடக்கும், காங்கிரஸ் அரசுக்கு இது போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இப்போது அரசுக்கு எதிராக பகிரங்கமாக பேச ஆரம்பித்து உள்ளனர்.
'தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை' என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்ததுடன், அமைச்சர்கள் மீதும் சரமாரி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
இதனால், அரசுக்கு பாதகம் ஏற்படும் சூழ்நிலை வந்ததால், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை, இரண்டு நாட்களுக்கு முன், மேலிடம் பெங்களூரு அனுப்பி வைத்தது.
டைரி குறிப்பு
குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், பி.ஆர்.பாட்டீல், கொத்துார் மஞ்சுநாத், பிரதீப் ஈஸ்வர், புட்டசாமி கவுடா, சீனிவாஸ் உட்பட 30 எம்.எல்.ஏ.,க்களுடன் நேற்று முன்தினம் அவர் ஆலோசனை நடத்தினார்.
தொகுதியில் அவர்கள் செய்த பணிகள் பற்றி கேள்வி எழுப்பியவர், குறைகளையும் கேட்டுள்ளார். இவர்களில் சிலர், முதல்வர் சித்தராமையாவை மாற்றி விட்டு, சிவகுமாரை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று 2வது நாளாக எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து, ரன்தீப்சிங் ஆலோசனை நடத்தினார்.
பங்கார்பேட்டை - நாராயணசாமி, பாகேபள்ளி - சுப்பாரெட்டி, காக்வாட் - ராஜு காகே, மாகடி - பாலகிருஷ்ணா, சாந்திநகர் - ஹாரிஸ் உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏ.,க்கள் இதில் பங்கேற்றனர்.
இவர்கள் அனைவரும், 'நாங்கள் அனைவரும் கட்சிக்கு மூத்தவர்கள். எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும்' என்று கேட்டுள்ளனர்.
'கோலார் மாவட்டத்தில் இருந்து நான்கு பேர் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளோம். நான் மூன்றாவது முறை எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். ஆனால், கோலாருக்கு அமைச்சர் பதவி தரவில்லை. சீனியர் என்ற முறையில் எனக்கு அமைச்சர் பதவி வேண்டும்' என்று, பங்கார்பேட்டை நாராயணசாமி கேட்டு உள்ளார்.
இதுபோன்று பாகேபள்ளி சுப்பாரெட்டியும், 'என் அனுபவத்தை மதித்து, அமைச்சர் பதவி வழங்க வேண்டும்' என்று குரலை உயர்த்தி கேட்டுள்ளார்.
நோட்டீஸ்
மாகடி பாலகிருஷ்ணா, 'ம.ஜ.த.,வில் மூன்று முறையும், பா.ஜ.,வில் ஒரு முறையும் எம்.எல்.ஏ.,வாக இருந்து உள்ளேன். இப்போது ஐந்தாவது முறை எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். என் சீனியாரிட்டியை மதிக்க வேண்டும். எனக்கும் கண்டிப்பாக அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும்' என்று, கறார் காட்டியுள்ளார்.
ராஜு காகே, 'பா.ஜ.,வில் மரியாதை கிடைக்கவில்லை என்று தான் இங்கு வந்தேன். இங்கேயும் என்னை அவமதிப்பது சரியல்ல.
'எனக்கு அமைச்சர் பதவி வேண்டும். இல்லாவிட்டால் நான் கட்சியில் இருப்பதில் எந்த பயனும் இல்லை' என்று, மிரட்டலாக கூறியுள்ளார்.
ஆளாளுக்கு அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி துாக்கியதை பார்த்து, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார். 'உங்கள் கோரிக்கை குறித்து, முதல்வர், கட்சி மேலிடத்திடம் பேசுகிறேன்' என்று பொத்தாம் பொதுவாக கூறி அனுப்பியுள்ளார்.
பின், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ''என்னை சந்தித்த எம்.எல்.ஏ.,க்கள், தொகுதிக்கு அவர்களின் பங்களிப்பு என்ன? தொகுதிக்கு என்ன வேண்டும் என்பது பற்றி விவாதித்தனர். யாரும் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கேட்கவில்லை,'' என்றார்.
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''தலைமை மாற்றம் எதுவும் இல்லை. நாங்கள் அனைவரும் சித்தராமையா கரத்தை வலுப்படுத்துவோம்.
''முதல்வர் பதவி குறித்து இனி யார் பேசினாலும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவேன். கட்சியை வலுப்படுத்துவது குறித்து எம்.எல்.ஏ.,க்களுடன், மேலிட பொறுப்பாளர் ஆலோசித்து உள்ளார்,'' என்றார்.