ஏப்ரலில் சம்விதன் பச்சாவோ யாத்திரை துவக்கம்; காங்கிரஸ் அறிவிப்பு
ஏப்ரலில் சம்விதன் பச்சாவோ யாத்திரை துவக்கம்; காங்கிரஸ் அறிவிப்பு
ADDED : பிப் 19, 2025 09:26 PM

புதுடில்லி: அரசியலமைப்பை பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் சம்விதன் பச்சாவோ யாத்திரையை ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொதுச்செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் 7 மணிநேரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 30 மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அரசியலமைப்பை பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் சம்விதன் பச்சாவோ யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம். ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில் இந்த யாத்திரையை தொடங்க முடிவெடுத்துள்ளோம்.
மாவட்ட அளவில் கட்சிகளை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு கட்சியில் உள்ள அமைப்புகளை சீர்திருத்தம் செய்யும் ஆண்டாக இருக்கும் என்று ஏற்கனவே நாங்கள் தெரிவித்துள்ளோம். அடுத்து காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் குஜராத்தில் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது, இவ்வாறு அவர் கூறினார்.

