ADDED : நவ 03, 2024 11:33 PM
இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும், காங்கிரஸ் தலைவர்கள் வாக்குறுதி திட்டங்களை கூறி ஓட்டு கேட்காமல் உள்ளனர்.
சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பி.பி.எல்., ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தலா 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை, 200 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தினால் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை, மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை என, ஐந்து வாக்குறுதிகளை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் அறிவித்தது.
இதனால், அந்த கட்சி தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த பின், ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் அமல்படுத்தினர்.
ஆனால் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் தவிர, மற்ற நான்கு திட்டங்களையும் சரியாக செயல்படுத்த முடியாமல் அரசு திணறியது.
ஆனாலும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஐந்து வாக்குறுதிகளை கூறி ஓட்டு கேட்டனர். ஆனால் மக்களிடம் எடுபடவில்லை. காங்கிரசால் ஒன்பது இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் சென்னப்பட்டணா, சண்டூரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும், அக்கட்சி தலைவர்கள் வாக்குறுதி திட்டங்களை முன்வைத்து ஓட்டு கேட்பது இல்லை. அதற்கு மாறாக வேட்பாளர்கள் செய்த பணிகளை முன்வைத்து ஓட்டு கேட்கின்றனர்.
'வாக்குறுதி திட்டங்களை முன்வைத்து ஓட்டு கேட்டால், வெற்றி பெற முடியாது என்று காங்கிரசுக்கு தெரிந்து விட்டது' என, எதிர்க்கட்சியினர் கிண்டல் அடிக்கின்றனர்.
- நமது நிருபர் -