ADDED : பிப் 29, 2024 11:15 PM
சிக்கபல்லாப்பூர்: கர்நாடக சட்டசபை தேர்தலின்போது, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும், கட்சிக்குள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகளில், 'சீட்' எதிர்பார்த்தவர்கள், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டனர். இவர்களுக்குள் கட்சிக்குள் இருந்தும் ஆதரவு கிடைத்தது.
சிக்கபல்லாப்பூரின் கவுரிபிதனுாரில் 'சீட்' எதிர்பார்த்த புட்டசாமி கவுடா, விஜயநகராவின் ஹரப்பனஹள்ளியில் 'சீட்' எதிர்பார்த்த லதா மல்லிகார்ஜுனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் அவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் வெற்றிக்கு, காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சிலரும் உழைத்தனர்.
இதையடுத்து கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக, காங்கிரசில் இருந்து சிலர் நீக்கப்பட்டனர்.
தற்போது சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருப்பதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும், கட்சிக்கு அழைத்து வரும் படலம் துவங்கி உள்ளது.
நீக்கப்பட்டவர்கள் மீண்டும் காங்கிரசில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

