காங்., அதிகார மையம் யார்? சதீஷ் ஜார்கிஹோளி மழுப்பல்!
காங்., அதிகார மையம் யார்? சதீஷ் ஜார்கிஹோளி மழுப்பல்!
ADDED : ஜன 29, 2024 07:17 AM

ஹாவேரி: ''காங்கிரசில் அதிகார மையமாக நான் மாறவில்லை. காங்கிரசில் இருக்கிறேன். எங்களுக்கு இப்போது லோக்சபா தேர்தல் முக்கியம். தேர்தல் முடிந்ததும் பார்ப்போம்,'' என, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், எந்த தொகுதியில் நிற்பது என்பதை அவரது கட்சியே தீர்மானிக்கும்.
லிங்காயத் சமூக ஓட்டுகள், காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு போகும் என்று சொல்ல முடியாது. தேர்தல் வரும்போது, யார் எந்த பக்கம் ஓட்டு போடுவர் என்று பார்ப்போம்.
ஆரம்பம் முதலே காங்கிரசில் இருப்பவர்கள், இங்கேயே இருப்பர் என நம்புகிறோம். ஜெகதீஷ் ஷெட்டர் சில காலம் காங்கிரசில் இருந்தார். அவர் விலகுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
நான், காங்கிரசில் அதிகார மையமாக மாறவில்லை. காங்கிரசில் இருக்கிறேன். எங்களுக்கு இப்போது லோக்சபா தேர்தல் முக்கியம். தேர்தல் முடிந்ததும் பார்ப்போம். எங்களுடன் ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தனர்.
எங்களுக்கு சொந்த ஓட்டு வங்கி உள்ளது. பா.ஜ.,வை போன்று தேர்தலுக்காக ராமர் கோவில் பெயரை சொல்லி, மக்களை கவர மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.