ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் காங்.,: ராகுல் பெருமிதம்
ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் காங்.,: ராகுல் பெருமிதம்
ADDED : மே 05, 2024 03:40 PM

ஹைதராபாத்: 'ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் காங்., அரசு தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ளது' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இன்று நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. ஒரு பக்கம் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளது. இன்னொரு பக்கம் அரசியலமைப்பு சட்டத்தை அழிக்கும் முயற்சியில் பா.ஜ., களம் இறங்கி உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். பழங்குடியினர் முன்னேறக் கூடாது என்று பா.ஜ., விரும்புகிறது.
வருமானம் இரட்டிப்பு
கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை நரேந்திர மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் அரசு தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ளது. அதேபோல் மத்தியிலும் ஆட்சி அமைய வேண்டும். நீர், காடுகள் மற்றும் நிலங்களை நாங்கள் பாதுகாப்போம். 100 நாள் வேலை திட்டத்தில், ஒரு நாள் ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்துவோம். அங்கன்வாடி பணியாளர்களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.
உத்தரவாதம்
தெலுங்கானாவில் அனைத்து உத்தரவாதங்களையும் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இப்போது நாடு முழுவதும் எங்களது உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்படும். நாட்டின் ஒவ்வொரு படித்த இளைஞருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.