தர்மஸ்தலா கோவிலுக்குள் சடலங்கள் புதைத்ததாக புகார் அளித்தவர் திடீர் 'பல்டி'
தர்மஸ்தலா கோவிலுக்குள் சடலங்கள் புதைத்ததாக புகார் அளித்தவர் திடீர் 'பல்டி'
ADDED : ஆக 19, 2025 01:24 AM

பெங்களூரு: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை, கர்நாடகாவின் தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தவர், தற்போது அதை மறுத்துள்ளார். மர்ம கும்பல் மிரட்டலால் பொய் புகார் அளித்ததாக கூறியுள்ள அவர், மண்டை ஓடு, எலும்புகளையும் அந்த கும்பலே தந்ததாக, 'திடுக்' தகவல்களை வெளியிட்டு உள்ளார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. இங்குள்ள கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, பெல்தங்கடி தாலுகாவின் தர்மஸ்தலாவில், பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் உள்ளது.
இந்த கோவிலில், 1995 முதல் 2012ம் ஆண்டு வரை, துாய்மை பணியாளராக வேலை செய்த ஒருவர், ஜூலை 3ம் தேதி சில வக்கீல்களுடன் பெல்தங்கடி நீதிமன்றம் சென்று, பிரிவு 164ன் கீழ், நீதிபதி முன் வாக்குமூலம் அளித்தார்.
அதில், 'தர்மஸ்தலா கோவிலில் நான் பணியாற்றிய காலகட்டத்தில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை, என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்தேன்.
'கடந்த 2012ம் ஆண்டிற்கு பின், வேறு மாநிலத்திற்கு சென்று விட்டேன். புதைக்கப்பட்ட பெண்கள் என் கனவில் வந்ததால் மனசாட்சி உறுத்தியது. தற்போது உண்மையை சொல்ல வந்துள்ளேன்' எனக் கூறினார். மேலும் சில எலும்பு கூடுகள், மண்டை ஓடுக ளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
எஸ்.ஐ.டி., அமைப்பு இது, கர்நாடகா மட்டு மின்றி, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெல்தங்கடி போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவானது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா உள்ளிட்டோர், இந்த வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, மாநில அரசுக்கு அழுத்த ம் கொடுத்தனர்.
இதன்படி, ஜூலை 19ம் தேதி எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையிலான குழுவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், ஜிதேந்திர குமார் தயமா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசா ர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நேத்ராவதி ஆற்றின் கரையோரம், புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களை, 'மார்க்கிங்' செய்தனர். ஜூலை 29ம் தேதி முதல் அங்கு குழிகள் தோண்டப் பட்டன. ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.
ஆறாவது இடத்தில் தோண்டிய போது, சில எலும்பு கூடுகள், மண்டை ஓடு கிடைத்தன. மேலும், ஏழு இடங்களில் தோண்டியும் எதுவும் சிக்கவில்லை.
இந்த விஷயத்தில், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., முதலில் அமைதி காத்தது. தர்மஸ்தலாவில் எதுவும் சிக்கவில்லை என்று தெரிந்ததும், கேள்விகளால் அரசை துளைத்து எடுத்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கிய அரசு, புகார்தாரரிடம் தீவிர விசாரணை நடத்தும்படி, எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து எஸ்.ஐ.டி., நடத்திய, 'கிடுக்கிப்பிடி' விசாரணையில், புகார்தாரர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை வந்த கும்பல் புகார்தாரர் கூறியதாக, போலீசார் வெளியிட்ட தகவல்கள்:
தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில், 1995 - 2012 வரை வேலை செய்தேன். பின், வேலையை விட்டுவிட்டு, தமிழகத்தின் சென்னைக்கு சென்று விட்டேன். 2023 டிசம்பர் மாதம், சென்னையில் ஒரு கும்பல் என்னை சந்தித்தது. 'தர்மஸ்தலாவில் நீ வேலை செய்த போது, எத்தனை உடல்களை புதைத்தாய்' என்று என்னிடம் கேட்டனர்.
அதற்கு, 'தர்மஸ்தலா புனித தலம். இங்கு வந்து உயிரிழந்தால் மோட்சம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் இங்கு வந்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் உடல்களை, போலீஸ், கிராம பஞ்சாயத்து மூலம், சட்டப்படி புதைத்துள்ளேன்' என்று கூறினேன்.
ஆனால் அந்த கும்பல், 'உடல்களை சட்டவிரோதமாக புதைத்ததாக கூற வேண்டும்' என்று என்னிடம் வலியுறுத்தியது. நான், முடியாது என்று மறுத்து விட்டேன்.
தைரியம் வந்தது ஆனாலும், அந்த கும்பல் என்னை விடவில்லை. 'நாங்கள் சொல்வது போன்று, நீ சொல்ல வேண்டும்' என்று அழுத்தம் தந்தனர். என்னென்னவோ சொல்லி என் மனதை மாற்றி விட்டனர். சென்னையில் இருந்து, அவர்களே என்னை கர்நாடகாவுக்கு அழைத்து வந்தனர்.
போலீசாரிடம் என்ன சொல்ல வேண்டும்; நீதிமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்று எனக்கு பயிற்சி அளித்தனர். நான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற எலும்பு கூடுகள், மண்டை ஓடு அந்த கும்பல் கொடுத்தது தான்.
நீதிமன்றத்திற்கு சென்று பொய் சொல்ல எனக்கு பயமாக இருந்தது. 'சுஜாதா பட் என்ற பெண் தர்மஸ்தலாவுக்கு சென்ற தன் மகளை காணவில்லை' என்று, போலீசில் புகார் செய்வார்.
அதே நேரத்தில் நீயும், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று கூறினர். சுஜாதா பட் போலீசில் புகார் அளித்த பின், எனக்கு தைரியம் வந்தது. நீதிமன்றத்திற்கு சென்று தைரியமாக, பொய் வாக்குமூலம் அளித்தேன்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
அரசின் ஒப்புதல் புகார்தாரர் அடித்த அந்தர்பல்டியால், வழக்கின் முழு விசாரணையும் மாற உள்ளது. தர்மஸ்தலா கோவிலுக்கு களங்கத்தை ஏற்படுத்த சதி நடந்திருப்பதும் அம்பலம் ஆகியுள்ளது. இதுவரை, புகார்தாரரை வெறும் சாட்சியாக மட்டுமே எஸ்.ஐ.டி., வைத்து இருந்தது. இனி, அவரை வழக்கின் குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை பள்ளம் தோண்டியது உட்பட, வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அறிக்கை தயாரித்து வருகின்றனர். இந்த நடைமுறை முடிந்த பின், புகார்தாரர், அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்க உள்ளனர்.
ஒரு கும்பல் தன்னை அணுகியது என்று தான் புகார்தாரர் கூறி உள்ளார். அந்த கும்பல் எது, அதில் எத்தனை பேர் இருந்தனர் என்பது பற்றி, அவர் எதுவும் சொல்லவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.