கார் மோதி சாலையில் இழுத்து செல்லப்பட்ட கான்ஸ்டபிள் பலி
கார் மோதி சாலையில் இழுத்து செல்லப்பட்ட கான்ஸ்டபிள் பலி
UPDATED : செப் 30, 2024 08:39 AM
ADDED : செப் 29, 2024 11:51 PM

புதுடில்லி, டில்லியில், அதிவேகமாக சென்ற காரை துரத்திய 30 வயது போலீஸ் கான்ஸ்டபிளை இடித்த மர்ம நபர்கள், சாலையில் தரதரவென அவரை இழுத்துச் சென்றதில் தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
டில்லி நங்லோய் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் சந்தீப், சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவ்வழியாக வேகான்ஆர் கார் வேகமாக கடந்து சென்றது. இதையடுத்து, அந்த காரை பின்தொடர்ந்து சென்ற சந்தீப், காரை ஓட்டிச்சென்ற நபரிடம் மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் அந்த நபர், சந்தீப்பை தகாத வார்த்தையில் திட்டியதுடன் காரை மேலும் வேகமாக ஓட்டிச்சென்றார். எனினும் சந்தீப், அந்த காரை பின்தொடர்ந்து சென்றார்.
இதனால் ஆத்திரம்அடைந்த அந்த நபர், சந்தீப்பின் பைக் மீது காரை மோதினார்.
இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த சந்தீப், 10 மீட்டர் துாரத்திற்கு சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்ட மற்றொரு கார் மீது சந்தீப் மோதினார்.
இதன் காரணமாக, தலையில் படுகாயம் ஏற்பட்டது.
அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிர்இழந்தார்.
அப்பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
சந்தீப் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார், சிறிது தொலைவில் நிறுத்தப்பட்டதையும், அதில் இருந்து இரண்டு பேர் தப்பிச் சென்றதையும் போலீசார் கண்டறிந்தனர்.
அவர்களை தேடி வருகின்றனர். உயிரிழந்த சந்தீப்பிற்கு, மனைவி மற்றும் 5 வயதில் மகன் உள்ளார்.

